மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை..! வங்கக் கடலில் உருவாகிறது முதல் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
தெற்கு வங்கக் கடலில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வந்துள்ளது. தென்மேற்குப் பருவமழை இயல்பை விட 23 சதவிகிதம் கூடுதலாகவே பெய்துள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் 33 சதவிகிதம் அளவிற்கு கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டியிருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர், அழகர்கோவில், வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பி குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலவளவு பகுதியில் பலத்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள சோமகிரி மலையில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து சுற்றியுள்ள கிராமங்களை சூழ்ந்தது. இதனால் இங்குள்ள பரம்புக்கண்மாய் 16 ஆண்டுகளுக்கு பின் முழுமையாக நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது.
வடகிழக்குப் பருவமழை ஜோராக தொடங்கியது - 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்
மழை வெள்ளம்
மதுரை புறநகர் பகுதிகளிலும் திருமங்கலம், குண்ணத்தூர், டி.கல்லுப்பட்டியிலும் விடிய விடிய இடி மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், செண்பகத்தோப்பு பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டியது. நெடுஞ்சாலைகளில் வெள்ளநீர் குளம் போல தேங்கியது. நெல்லையில் நேற்று பிற்பகலில் கனமழை கொட்டித்தீர்த்தது. நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
தென் மாவட்டங்களில் மழை
இதனிடையே இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் வடகடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும் என்றும். இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயல்பை விட கூடுதல் மழை
பொதுவாக வடகிழக்குப் பருவமழை காலத்தில் வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்திற்கு அதிக அளவில் மழை கிடைக்கும். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் உருவான புயல்களால் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட கூடுதலாக கிடைத்ததாக வானிலை மைய தலைவர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறுமா என்பது பற்றி வானிலை மையம் எதுவும் குறிப்பிடவில்லை.