அணைகள், ஏரிகள், குளங்களை நிரப்பி விட்டு வடகிழக்குப் பருவமழை விடை பெற்றது
வடகிழக்குப் பருவமழை இன்றுடன் விடைபெற்று விட்டது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் இரண்டு புயல்கள் உருவானதால் கொட்டித்தீர்த்த கனமழை மூலம் ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பியுள்ளன.
சென்னை: தமிழ்நாட்டில் அணைகள், ஏரிகள், குளங்களை நிரப்பி விட்டு வடகிழக்குப் பருவமழை விடைபெற்று விட்டது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு உள் கர்நாடகாவில் இருந்தும் வட கிழக்குப் பருவமழை விலகி விட்டது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை தென்மேற்குப் பருவமழை காலமாகும். அக்டோபரில் தொடங்கி டிசம்பர் இறுதி வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த ஆண்டு இரண்டு பருவமழை காலத்திலும் நிறைவாக மழை பெய்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை முடிந்த மறுநாளே வடகிழக்குப் பருவமழை சரியாக தொடங்கியது. ஐப்பசி, கார்த்திகை, மார்கழி முடிய மாதம் மும்மாரி கொட்டித் தீர்த்தது பருவமழை.
நிவர், புரேவி புயல்கள்
வங்கக்கடலில் உருவான நிவர், புரேவி புயல்களால் அணைகளும், ஏரிகளும், குளங்களும் நிரம்பி வழிகின்றன. வறண்டு கிடந்த ஆறுகள் எல்லாம் உயிர் பெற்று ஓடிக்கொண்டிருக்கின்றன. காணும் இடங்களில் எல்லாம் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
எங்கும் வெள்ளம்
மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால் எங்கெங்கும் பச்சைப் பசேல் என காணப்படுகிறது. இந்த ஆண்டு விளைச்சல் அதிகம் என்று கொண்டாடிய நேரத்தில் மார்கழி இறுதியில் தொடங்கி தை பொங்கல் நேரத்தில் பெய்த அடை மழை விவசாயிகளை கண்ணீர் கடலில் ஆழ்த்தி விட்டது.
வாட்டி வதைக்கும் குளிர்
மழை எப்போது விடும், சூரியனை எப்போது பார்க்கலாம் என்று ஏங்கும் அளவிற்கு மழை வெச்சு செய்து விட்டது. மழை விட்டாலும் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. சுள்ளென்ற வெயில் அடித்தாலும் அதையும் மீறி எலும்பை ஊடுருவுகிறது குளிர். தை மாதம் தரையெல்லாம் குளிரும் என்று சொன்னது சரியாகவே இருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை விலகியது
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடகிழக்குப் பருவமழையானது தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு உள் கர்நாடகாவில் இருந்தும் வட கிழக்குப் பருவமழை விலகி விட்டது தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேசான மழை இருக்கு
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவித்துள்ளது. ஜனவரி 20, 21ஆம் தேதிகளில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையில் பனி மூட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மேக மூட்டமும் காலை நேரங்களில் பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமான அளவே பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு தெரிவித்துள்ளது.