வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னை: வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக பகுதிகளில் நிலவுகிறது.
ஹைதராபாத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை.. அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்
வட தமிழகத்துக்கு மழை வாய்ப்பு
இதனால் அடுத்த 24 மணிநேரத்துக்கு வட தமிழகம் மற்றும் புதுவை- காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சேலம், தருமபுரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
வடமாவட்டங்களில்..
அடுத்த 48 மணிநேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்கள், வட தமிழக மாவட்டங்கள் குறிப்பாக்க நீலகிரி, கோவை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசையும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக் கூடும்.
அரிமளம், வேடசந்தூர்
கடந்த 24 மணிநேரத்தில் புதுக்கோட்டை அரிமளத்தில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. திண்டுக்கல் வேடசந்தூர், நீலகிரி தேவலாவில் தலா 5 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. மதுரை, கிருஷ்ணகிரி, சென்னையில் 4 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது. மீனவர்கள் இன்றும் நாளையும் மத்திய மேற்கு, வடமேற்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.