வாவ் சென்னை.. நாளை முதல் 6 நாட்களுக்கு 'சான்ஸ்' இருக்காம்.. வயிற்றில் 'மழை'யை வார்த்த நார்வே!
Recommended Video
சென்னை: சென்னையில் நாளை முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துபோய்விட்டது. கடந்த 2 ஆண்டுகளாக மழையில்லாமல் சென்னை உள்ளிட்ட இடங்கள் தவித்து போயுள்ளன. போதாக்குறைக்கு வாட்டி எடுக்கும் வெப்பம் வேறு.
கோடை தொடங்கியவுடன் ஃபனி புயல் போக்கு காட்டி விட்டு ஒடிஸா பக்கம் அழையா விருந்தாளியாக சென்றுவிட்டது. இதனால் கோடை வெப்பம், புயல் திசை மாறியதால் ஏற்பட்ட அனல்காற்று, கத்தரி வெயில் ஆகிய அனைத்தும் ஒரு சேர வந்து மக்களை வாட்டி வதைத்து வந்தது.
இப்படியா தோற்பது.. கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு.. தலைவர், செயல் தலைவர் தப்பினர்
தகிக்கும் வெயில்
இதில் கத்தரி வெயில் முடிந்துவிட்டது. எனினும் வெயில் தொடர்ந்து சென்ட்சுரியை தாண்டி வருகிறது. இதனால் மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
அரை நாள் விடுப்பு
இந்த நிலையில் 196 நாட்களாக சென்னையில் மழை இல்லாததால் தண்ணீர் பஞ்சம் கோர தாண்டவம் ஆடி வருகிறது. தண்ணீர் பஞ்சத்தால் ஹோட்டல்கள், மேன்ஷன்கள் மூடப்பட்டு வருகின்றன. அது போல் சில பள்ளிகளுக்கும் அரை நாள் விடுப்பு விடப்பட்டுள்ளது.
மழை உண்டு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்றும் அது போல் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யும் என அறிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் சென்னை மக்களின் வயிற்றில் பாலை வார்க்கும் வகையில் நாளை முதல் சென்னைக்கு 6 நாட்களுக்கு மழை என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை 6 மணி முதல் 12 மணி வரை மழை பெய்ய தொடங்கும்.
நார்வேயின் நற்செய்தி
அதைத் தொடர்ந்து இந்த மழை மறுநாள் 21-ஆம் தேதி காலை 6 மணி வரை பெய்யும். பின்னர் நண்பகல் 12 மணி வரை வெயில் பின்னர் வானம் மேகமூட்டம் என மாறி மாறி மழையும் வெயிலும் இருக்கும். இப்படியாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் லேசான மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் இது தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் மழையாக இருக்காது என தெரிகிறது.