வாவ்! சென்னை மக்களே!.. 22-ஆம் தேதி மழை பெய்ய போகிறது.. நார்வேயிலிருந்து நல்ல செய்தி வந்திருக்கு!
சென்னை: வரும் 22-ஆம் தேதி முதல் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 3 ஆண்டுகளாக ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது. இதனால் கோடை தொடங்குவதற்கு முன்பிருந்தே வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்த நிலையில் கோடை காலத்தில் புயல் உருவானது. அந்த புயல் தமிழகம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு கடந்திருந்தால் சென்னையின் தண்ணீர் பிரச்சினைக்கு பெரிய தீர்வாக அமைந்திருக்கும்.
கரையை கடந்தது
ஆனால் அந்த புயல் ஒடிஸா பக்கம் கரையை கடந்தது. இது போல் புயல் ஏமாற்றத்தை தந்ததால் கடும் வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்தனர். அது போல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
முடங்கியது
சென்னையில் கேட்கவே வேண்டாம். காலை 7 மணிக்கே வெயில் மண்டையை பிளக்கிறது. இதனால் மக்கள் யாரும் மாலை 5 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் இந்த வெப்பம் இன்னும் ஒரு வாரத்துக்கு சுமார் 11 மாவட்டங்களுக்கு அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தண்ணீர் பஞ்சம்
தேனி, குமரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. இதனால் கடும் புழுக்கத்திலும் தண்ணீர் பஞ்சத்திலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மழை பெய்யும்
இந்த நிலையில் சென்னைவாசிகளின் வயிற்றில் பாலை வார்த்தது போல் நார்வே வானிலை மையம் ஒரு தகவலை தெரிவித்துள்ளது. அதாவது வரும் 22-ஆம் தேதி முதல் சென்னையில் மிதமான மழை பெய்யும். 23-ஆம் தேதி காலை, மாலை வேளைகளில் மிதமான மழைக்கு வாய்ப்புண்டு.
சென்னைவாசிகள்
பின்னர் 24 -ஆம் தேதி படிப்படியாக குறைந்து மழை ஓய்ந்து விடும் என கூறியுள்ளது. இந்த மழையால் தண்ணீர் பஞ்சம் எல்லாம் தீராது. பூமி குளிர்ந்து வெப்பம் குறையும். ஏதோ ஒன்று இப்பயாவது வருண பகவானுக்கு சென்னைவாசிகள் மீது கரிசணம் வந்ததே அது போதும்.