ஹய்யா பசங்களா? நார்வேல இருந்து குட்நியூஸ் வந்திருக்கு.. 2-ஆம் தேதி வரை சென்னையில் மழையாம்.. ஜாலியா!
Recommended Video
சென்னை: நாளை முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை சென்னையில் நல்ல மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை அந்தந்த மாநிலங்கள், கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு நன்றாக பெய்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.
ஆனால் வடகிழக்கு பருவமழை மட்டும் சில ஆண்டுகள் சூப்பராகவும் சில ஆண்டுகள் சுமாராகவும் பெய்கிறது.
வறட்சி
கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை உள்பட தமிழகத்தின் எந்த பகுதிகளிலும் அந்தளவுக்கு மழையை பார்க்க முடியவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வறட்சிதான் மிஞ்சுகிறது.
நள்ளிரவு முதல் நல்ல மழை
இந்த முறையாவது நல்ல மழை பெய்யும் என எதிர்பார்த்திருந்த வேளையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பிரேக் எடுத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து பருவமழை மீண்டும் தீவிரமான நிலையில் சென்னை மற்றும் புறநகர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் நள்ளிரவு முதல் நல்ல மழை பெய்தது.
நார்வே வானிலை அறிக்கை
இதுகுறித்து நார்வே வானிலை மையம் கூறுகையில் நாளை வெள்ளிக்கிழமை சென்னையில் கனமழை பெய்யும். அது போல் அடுத்த நாளான சனிக்கிழமையும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை லேசானது முதல் கனமழை வரை பெய்யும்.
டிசம்பர் 2-ஆம் தேதி வரை
அது போல் திங்கள்கிழமையும் லேசானது முதல் கனமழை பெய்யும். அதன் பிறகு செவ்வாய்க்கிழமை மழை ஏதும் இல்லை. அதாவது நாளை முதல் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வரை லேசானது முதல் கனமழை வரை பெய்யும் என நார்வே வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.