மீண்டும் வந்தார் விஜயபாஸ்கர்.. பீலா ராஜேஷை பின்னால் நிறுத்திவிட்டு பிரஸ் மீட்
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் தொடர்பாக இன்று மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரஸ் மீட் செய்தார்.
Recommended Video
ஆரம்பத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரஸ் மீட் செய்து வந்தார். ஆனால், திடீரென அவர் வருவதை நிறுத்திவிட்டார். இதற்கு, அவரை ஐடி விங்கினர் ஓவராக புகழ்ந்து போட்ட மீம்கள்தான் காரணம் என்று ஒரு வதந்தி சுற்றி வருகிறது.
இந்த நிலையில்தான், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பிரஸ் மீட் செய்ய ஆரம்பித்தார். அவரது பிரஸ் மீட் ஸ்டைலுக்கு ஒரு ரசிக வட்டாரமே கூடிவிட்டது.
பீலா ராஜேஷுக்கு எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் பாராட்டு வந்தது. முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூட பாராட்டி ட்வீட் செய்தார். அதேநேரம், விமர்சனங்களும் வந்தன. குறிப்பாக, திமுக தரப்பிலிருந்து.. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் வராமல் இருப்பது இடிக்கிறது. பாதிப்பு அதிகரிக்கும்போது, பொறுப்பு ஏற்க வேண்டியது அரசுதானே, தவிர அதிகாரிகள் இல்லை. எனவே விஜயபாஸ்கர்தான் பிரஸ் மீட்டுக்கு வர வேண்டும் என்றனர் திமுக நிர்வாகிகள் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள்.
இந்த விமர்சனங்களுக்கு இடையே 2 நாட்கள் தலைமைச் செயலர் சண்முகம் பிரஸ் மீட் செய்தார். பிறகு மறுபடியும் பீலா வந்தார். இன்று வெகு நாட்களுக்கு பிறகு, விஜயபாஸ்கர் மாலை செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் மீண்டும் வந்தாரா, அல்லது கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்துவிட்டதால் வந்தாரா, அல்லது குறிப்பிட்ட மதப் பிரிவினர் குறித்து இப்போது பேச வேண்டியதில்லை என்பதால், மெல்ல இப்போது பிரஸ் மீட் செய்ய வந்தாரா என்பது போன்ற பல கேள்விகள் சுற்றி வருகின்றன.
ஏப்ரல் பாதி கடந்துவிட்ட நிலையில், இப்போதுதான் இந்த மாதத்தில் முதல் முறையாக மாலை நேர பிரஸ் மீட்டுக்கு வந்துள்ளார் விஜயபாஸ்கர். பிரஸ் மீட் துவக்கத்திலேயே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிலாகித்து பேசினார் அவர்.
தனது பிரஸ் மீட்டின்போது, அவர் கூறுகையில், தமிழகத்தில் இன்று, 38 நோயாளிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார். இன்று 37 பேரை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பேட்டியின்போது பீலா ராஜேஷ் பின்னால் நின்றிருந்தார்.