கஜாவிற்காக இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்காத மோடி அரசு.. புயல் வந்ததாவது தெரியுமா?
கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரணமாக மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாயை கூட தமிழகத்திற்கு கொடுக்கவில்லை.
சென்னை: கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரணமாக மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாயை கூட தமிழகத்திற்கு கொடுக்கவில்லை.
கஜா புயலால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. 10 மாவட்டத்தில் மக்கள் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
10 வருடமாக நடந்த வளர்ச்சி பணிகள் எல்லாம் மொத்தமாக புயலால் நாசமடைந்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை.
பேச கூடவில்லை
பிரதமர் மோடி இதை பற்றி இதுவரை நேரடியாக எதுவும் பேசவில்லை. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டும் தமிழக முதல்வரிடம் பேசினார். ஆனால் அவரும் கூட அறிக்கையோ இல்லை புயலுக்கு வருத்தமோ தெரிவிக்கவில்லை. இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டது அவர்களுக்கு தெரியுமா என்று கூட தெரியவில்லை.
கேரளாவிற்கு கூட கொடுத்தது
மத்திய அரசுக்கும் கேரளாவிற்கும் பெரிய அளவில் தற்போது நெருக்கம் இல்லை. கேரளா அரசு மத்திய அரசுடன் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. அப்படிப்பட்ட கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு கூட மத்திய அரசு ரூபாய் 500 கோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இல்லை
ஆனால் தமிழக அரசியல் கட்சிகளுடன் பாஜக கொஞ்சம் நெருக்கமாகத்தான் இருக்கிறது. இங்கே அதிமுகவுடன் நல்ல நட்பில் பாஜக உள்ளது. அதேபோல் ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்டவர்களிடமும் நல்ல நட்பில் பாஜக தொடர்ந்து இருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு இதற்காக கொடுக்கவில்லை.
மத்திய அரசு கொடுக்குமா?
இதனால் மத்திய அரசு எதாவது நிதி உதவி கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது வரை தமிழக அரசின் 1000 கோடி ரூபாயை வைத்துதான் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இழப்பு மட்டுமே 10000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.