விளையாடிய விதி.. வெளியில் சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி.. ஆனால் உள்ளே.. செலிப்ரிட்டிகளின் சோக பின்னணி
சென்னை: சின்னத்திரையில் தனது தனித்துவமான காமெடி மூலம் மக்களை ஈர்த்த வடிவேல் பாலாஜி இன்று காலமானார். தனது சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் இவர் காலமானது, சின்னத்திரை கலைஞர்களின் பொருளாதார நிலை குறித்தும், அவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் கேள்வியை எழுப்பி உள்ளது.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி. வடிவேல் போல தொடக்கத்தில் நடித்து மக்களை கவர்ந்த இவர் தனக்கென்று தனி பாணியை அதன்பின் அமைத்துக் கொண்டார்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து அது இது எதுவில் சிரிச்சா போச்சு சுற்று மூலம் இணையம் முழுக்க இவர் வைரலானார். இதில் இவர் செய்த தனித்துவமான காமெடிக்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தது.
முடக்குவாதத்தால் 15 நாளாக வடிவேல் பாலாஜி அவதி.. யாரேனும் உதவியிருக்கலாமே!.. ரசிகர்கள் கண்ணீர்
செம வைரல்
சின்ன திரையில் வரிசையாக அதன்பின் பல நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு இருக்கிறார். வரிசையாக விஜய் டிவியில் நிறைய வைரலான பல காமெடி நிகழ்ச்சிகளில் இவர் நடித்துள்ளார். முக்கியமாக இவர் பெண் வேடம் போட்டு நடித்த நிகழ்ச்சிகள், நாய் சேகராக நடித்து வைரலானது, கேபிஒய் நிகழ்ச்சியில் நடுவராக வந்து காமெடி செய்தது எல்லாம் வைரல் ஹிட் ஆனது.
கிரிஞ் காமெடி
தற்போது இருக்கும் பெரும்பாலான காமெடியன்களை ''கிரிஞ் (cringe)'' என்று அதாவது பழைய கால காமெடி என்று பலரும் கிண்டல் செய்வது வழக்கம். ஆனால் வடிவேல் பாலாஜி எப்போதும் தனது காமெடியில் சொதப்பியதே இல்லை. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்ல அதிக வாய்ப்பு இருந்த நடிகர்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில்தான் வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன் ஹார்ட் அட்டாக் மூலம் உடல் நலிவடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதி
அதன்பின் மூன்று மருத்துவமனைகளுக்கு இவர் மாற்றபட்டு, உடல் மோசமாக நலிவடைந்து உள்ளார். உடல் உறுப்புகள் செயல் இழந்து, அதன்பின் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். கொரோனா காரணமாக இவருக்கு சிகிச்சை அளிக்க சரியாக பெட் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். வடிவேல் பாலாஜி மரணத்திற்கு முக்கிய காரணம் அவரின் உடல்நிலையை விட தேவையான நேரத்தில் அவரால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட முடியவில்லை என்பதுதான்.
பணம் இல்லை
ஆம் இவர் உடல் நலிவடைந்து அவசரமாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்ட போது அவரிடம் பணம் இல்லை. அதேபோல் கொரோனா காரணமாக அரசு மருத்துவமனையிலும் இடம் இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். அதற்கு முன் கொரோனா காரணமாக டிவி நிகழ்ச்சி எதுவும் நடக்காத காரணத்தால் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு இருக்கிறார்.
ஷோ இல்லை பணம் இல்லை
கொரோனா காரணமாக எல்லா சேனல்களும் ஷூடிங் எதுவும் செய்ய முடியாமல் முடங்கியது. இதனால் ஷூட்டிங் மூலம் வரும் வருவாய் இல்லாமல் வடிவேல் பாலாஜி கஷ்டப்பட்டு இருக்கிறார். இதனால்தான் அவரின் சிகிச்சைக்கு சரியான நேரத்தில் பணம் கட்ட முடியாமல் போய் இருக்கிறது. தனது சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் இவர் காலமானது, சின்னத்திரை கலைஞர்களின் பொருளாதார நிலை குறித்தும், அவர்களின் வாழவாதாரம் குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது.
சேனல்கள் இப்படி
வடிவேல் பாலாஜி என்று இல்லை, சின்னத்திரையில் வேலை பார்க்கும் பலரின் பொருளாதார பின்னணி இதுதான். வெளியில் பார்க்க ஆடம்பரமான வாழ்க்கை போல தெரிந்தாலும் உள்ளுக்குள் பலர் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். ஒரு தொலைக்காட்சி என்று இல்லை, கிட்டத்தட்ட எல்லா தொலைக்காட்சியிலும் நிலைமை இதுதான். வடிவேல் பாலாஜி என்று இன்றி பல சின்னத்திரை கலைஞர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு.. அதனால் விபரீத முடிவு எடுத்த நிகழ்வுகள் கூட நடந்துள்ளது.
வெளியே சந்தோசம்
வெளியில் சந்தோசமாக காமெடி செய்து சிரித்து பேசினாலும், உள்ளே பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இவர்கள் உள்ளனர். அதிலும் பலர் சினிமா ஆசை நிறைவேறாமல் , அதை தியாகம் செய்துவிட்டு, குடும்ப சூழ்நிலை காரணமாக சின்னத்திரையில் பணியாற்றுகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில்தான் இந்த கொரோனா இப்போது விளையாடி உள்ளது. கொரோனா நேரடியாக பலரை பலி வாங்கியது போக இன்னொரு பக்கம் பொருளாதார ரீதியாக மக்களை முடக்கி மறைமுகமாவும் பலரை பலி கொண்டு உள்ளது.