வேடந்தாங்கல் பரப்பளவு தனியார் மருந்து நிறுவனத்துக்காக குறைப்பா? வனத்துறை விளக்கம்
சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 5 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பு குறைக்கப்படுவதாக வெளியான தகவல்கள், முற்றிலும் தவறான கருத்து என தமிழக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
30 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட்ட பகுதியைச் சுருக்குவதற்குத் தமிழக அரசு முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக இளைஞரணி தலைவரும, ராஜ்யசபா எம்பி அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் "வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 40% அளவுக்கு குறைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது. தனியார் மருந்து நிறுவனத்தின் வணிக நலனுக்காக பறவைகள் சரணாலய சுற்றளவை குறுக்க நினைப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியுங்கள்.. பிரதமர் மோடிக்கு அனில் அகர்வால் கடிதம்
தனியார் மருந்து உற்பத்தி ஆலை
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் என்பது 73 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஏரியை உள்ளடக்கி மொத்தம் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது. சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் மருந்து உற்பத்தி ஆலை, பறவைகள் சரணாலயத்தின் உட்பகுதி வரை தமது ஆலையை விரிவாக்கம் செய்ய தீர்மானித்திருப்பதுடன், அதற்கான அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பித்திருக்கிறது
கவலையை அதிகரித்துள்ளது
இத்தகைய சூழலில் அந்த ஆலையின் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 5 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக குறைக்க அனுமதிக்கும்படி தேசிய விலங்குகள் நலவாரியத்திற்கு தமிழக வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் கடிதம் எழுதியிருப்பது தான் கவலையை அதிகரித்துள்ளது.
சுற்றுலாதளம்
வேடந்தாங்கலுக்கு உலகின் பல நாடுகளில் இருந்து பறவைகள் மட்டும் வந்து செல்வதில்லை. அங்கு வரும் பறவைகளின் அழகை ரசிப்பதற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், உலகின் பல நாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வேடந்தாங்கலுக்கு வந்து செல்கின்றனர்.
பறவைகள் வராத பகுதியாகும்
தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து வேடந்தாங்கலுக்கு மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக அழைத்து வரப்படுகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா மையமாக திகழும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை விரிவாக்க வேண்டுமே தவிர குறைக்க நினைக்கக் கூடாது. அவ்வாறு குறைத்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வேடந்தாங்கல் பறவைகள் வராத பகுதியாக மாறி விடும்" என்று அன்புமணி குறிப்பிட்டிருந்தார்.
வனத்துறை விளக்கம்
அன்புமணி ராமதாஸை போல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பை குறைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசின் முடிவு தொடர்பாக வெளியான தகவலால், கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 5கிமீ சுற்றளவு பரப்பு குறைக்கப்படுகின்றது என்பது மிகவும் தவறான கருத்து என வனத்துறை விளக்கம் அளித்திருக்கிறது. இது குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. "1998ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழக அரசின் ஆணைப்படி, வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் நிலப்பரப்பில் உள்ள தனியார் பட்டா நிலம், வருவாய் நிலங்களும் சரணாலயமாக அறிவிக்கை செய்யப்பட்டது.
சுற்றுச்சூழல் பகுதி
இதில் வனநிலங்கள் ஏதும் இல்லை. மத்திய அரசு அனைத்து சரணாலயங்களையும் மையப்பகுதி, இடைநிலைப்பகுதி, சுற்றுச்சூழல் பகுதி என வகைப்பாடு செய்யக்கூறியுள்ளது. அதன்படி வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றியுள்ள 5கிமீ நிலப்பரப்பானது, 0-1 கிமீ மையப்பகுதியாகவும், 1-3 கிமீ பகுதி இடைநிலைப் பகுதியாகவும், 3-5 கிமீ பகுதி சுற்றுச்சூழல் பகுதி எனவும் வகைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 5 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பு குறைக்கப்படுகின்றது என்பது மிகவும் தவறான கருத்து" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது