வன்னியர் அறக்கட்டளை விவகாரம்.. முதலில் பதவி விலகிவிட்டு பேசுங்க... ஸ்டாலினுடன் ஜி.கே. மணி மல்லுகட்டு
சென்னை: வன்னியர் அறக்கட்டளை விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பதிலளிக்காததால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேச வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
முரசொலி நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1985 ஆம் ஆண்டில் பெறப்பட்ட பட்டா ஒன்றை வெளியிட்டார். 1960-களில் பின்னாளில் கட்டப்பட்ட முரசொலி கட்டிடம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லையென்றால் அதற்கான மூலப் பத்திரத்தையும், பதிவு ஆவணங்களையும் தானே வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் எதிர்வினா எழுப்பியிருந்தார்.
அதற்குப் பிறகும் மூல ஆவணங்களை வெளியிடவில்லை. மாறாக, அரசியலில் இருந்து ராமதாஸ், அன்புமணி இராமதாஸ் ஆகியோர் விலக ஒப்புக்கொண்டால் மூல ஆவணத்தைக் காட்டுவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். ராமதாஸின் வினாக்களுக்கு விடையளிக்க அஞ்சி ஓடுவதிலிருந்தே அவரது நேர்மை வெளிப்படுகிறது.
ஹெல்மெட் அணியாத புதுவை முதல்வர் நாராயணசாமி- வழக்கு பதிவு செய்ய ஆளுநர் கிரண்பேடி உத்தரவு
அரசியல் இருந்து விலகாத ஸ்டாலின்
ஏப்ரல் ஒன்றாம் தேதி அரக்கோணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அந்த நாளுக்கு ஏற்ற வகையில் சில குற்றச்சாட்டுகளை ராமதாஸ் மீது முன்வைத்தார். வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை ராமதாஸ் அபகரிக்கப்பார்ப்பதாக அபாண்டமான புளுகியிருந்தார். அதற்கு பதிலளித்த ராமதாஸ், அந்தக் குற்றச்சாட்டை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், இல்லாவிட்டால் ஸ்டாலின் விலகத் தயாரா? என்றும் வினவியிருந்தார். இன்று வரை அந்தக் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் நிரூபிக்கவும் இல்லை; அரசியலில் இருந்து விலகவும் இல்லை. அந்த அளவுக்கு யோக்கியமான மனிதர் தான், கொஞ்சமும் தகுதியில்லாமல் சவால் விடுக்கிறார்.
நேர்மையான அரசியல்
வன்னியர் கல்வி அறக்கட்டளை விவகாரத்தில் கட்டவிழ்த்து விட்ட பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று இதுவரை ஸ்டாலின் பதவி விலகாதது ஏன்? முதலில் வன்னியர் கல்வி அறக்கட்டளை விவகாரத்தில் பதவி விலகி விட்டு, அதன்பிறகு ராமதாஸ் மற்றும் அன்புமணி குறித்தும் பேசுவது தான் நேர்மையான அரசியலாக இருக்கும்.
மோசடிகளின் மொத்த உருவம்
மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றால் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற ஸ்டாலின் இன்று வரை நகைக்கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்? வேளாண் கடனையும், கல்விக்கடனையும் தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதிகள் என்னவாயின? எட்டு வழி சாலைத் திட்டத்தையும், நீட் தேர்வையும் ரத்து செய்வதாகக் கூறி வெற்றி பெற்ற ஸ்டாலின், இப்போது அந்த பிரச்சினைகள் குறித்து பேசக்கூட முன்வராதது ஏன்? இப்படியாக முரண்பாடுகள் மற்றும் மோசடிகளின் மொத்த உருவமாக திகழும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது.
விசாரணைக்கு தயாரா?
முரசொலி நிலம் தொடர்பான 1924-ஆம் ஆண்டின் மூல ஆவணம் முதல் 1960களில் முரசொலி நிலம் வாங்கப்பட்டதற்கான நிலப்பதிவு ஆவணம் வரை அனைத்தையும் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும். அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி அமைந்திருந்த நிலம் எப்படி, எவ்வளவு தொகைக்கு முரசொலிக்கு மாறியது என்பதை அவர் விளக்க வேண்டும். இவற்றைக் கடந்து அரசியலில் நேர்மை என்பது சிறிதளவாவது இருந்தால் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி மாவட்டத் தலைநகரங்களில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகங்கள் வரை ஒவ்வொன்றும் யார் யாருக்கு சொந்தமான, எவ்வளவு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன? என்பது குறித்து வெளிப்படையான விசாரணையை அரசு நடத்த ஆணையிடக் கோரி எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு ஜி.கே. மணி கூறியுள்ளார்.