இரவோடு இரவாக ஓபிஎஸ் வீட்டுக்கு வந்த ரங்கசாமி.. புதுச்சேரி கூட்டணி என்னாச்சு?
சென்னை: நேற்று இரவோடு இரவாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான, ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி.
கிரீன்வேஸ் சாலையிலுள்ள ஓ.பன்னீர் செல்வம், இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இரவு 9 மணிக்கு மேல் சுமார் 20 நிமிடங்கள் நடந்தன. அதிமுக கூட்டணியில் இணைவது பற்றியும், புதுச்சேரி தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய, ரங்கசாமி கூறியதாவது: அதிமுக - பாமக - பாஜக கூட்டணி வலுவான கூட்டணியாகும்.
துணை முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தேர்தல் கூட்டணி குறித்தும் பேசினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரியின் சார்பில் முக்கிய அங்கம் வகிப்பது, முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ். எனவே, புதுச்சேரி தொகுதியை என்.ஆர். காங்கிரஸுக்கு வழங்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.