புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு
சென்னை: அதிமுகவின் கூட்டணி கட்சியான என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று கையெழுத்தானது.
வரும் அக்டோபர் 21ம் தேதி காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் அதிமுக சார்பில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதேபோல் திமுக சார்பில் விக்கிரவாண்டி தொதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இன்றுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் - துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. விரைவில் ரங்கசாமி காமராஜர் நகர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.