விஸ்வரூபம் எடுத்த "மய்யம்" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி
வட சென்னையில் மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் காளியம்மாளும் அசத்தி விட்டனர்.
சென்னை: "யார் என்று தெரிகிறதா?" என்று வட சென்னையில் வைத்துக் காட்டி விட்டார் கமல்ஹாசன். அட்டகாசமான ஒரு போட்டியை வட சென்னை பார்த்திருக்கிறது. புதிதாக பிறந்து வந்த மக்கள் நீதி மய்யமும், அதற்கு சளைக்காமல் சலங்கை கட்டி ஆடிய நாம் தமிழர் கட்சியின் காளியம்மாளும் அதிமுக, திமுக கூட்டணிகளை அதிர வைத்துள்ளனர்.
வட சென்னையில் தேமுதிக அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டது. திமுக சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிட்டார். இவர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்க மக்கள் நீதி மய்யம் முன்னாள் காவல்துறை அதிகாரி ஏஜி மெளர்யாவை களம் இறக்கியது. நாம் தமிழர் சார்பில் காளியம்மாள் அக்கா களம் கண்டார்.
மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழரும் என்ன வாக்குகளை பெற்று விடப் போகிறார்கள் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் இருவரும் அதிர வைத்து விட்டனர்.
திமுக வாரிசு
வட சென்னையில் திமுகவுக்கே வெற்றி. அக்கட்சி வேட்பாளர் கலாநிதி வீராசாமி, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன். திமுக காரர், வீராசாமி வாரிசு என்ற பலத்தின் பின்னணியில் போட்டியிட்ட அவரது வெற்றி பெரிய விசேஷம் இல்லை.
தேமுதிக மோகன்ராஜ்
தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிட்டார். இவருக்காக விஜயகாந்த்தே களம் இறங்கி தெருத் தெருவாக வேனில் அமர்ந்து பிரச்சாரம் செய்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்தார். ஆனால் மோகன் ராஜ் வெல்ல முடியவில்லை. 2வது இடமே அவருக்குக் கிடைத்தது.
புதிய சக்திகள்
இப்படி இரு பெரும் கட்சிகள் போட்டா போட்டி போட்ட நிலையில் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்து தனி ஆட்டம் ஆடியுள்ளன மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும். இதுதான் படு ஆச்சரியமாக இருக்கிறது. பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இந்த கட்சிகள் இறங்கி அடித்து அசத்தியுள்ளன.
மெளர்யாவுக்கு ஒரு லட்சம்
ஒரு லட்சம் ஓட்டுக்களைத் தாண்டிப் பெற்று அதிர வைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மெளர்யா. இவருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. மோகன்ராஜை விட 25,000 ஓட்டுக்களே குறைந்து பெற்றுள்ளார் மெளர்யா என்பது முக்கியமானது. இது மிகப் பெரிய சாதனையாகும். எல்லாம் கமல் அடித்த டார்ச் லைட் வெளிச்சத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு என்பதில் சந்தேகமே இல்லை.
கலக்கிய காளியம்மாள்
அடுத்து நம்மைக் கவர்ந்தவர் காளியம்மாள்தான். அக்கா அக்கா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் காளியம்மாள், குறுகிய காலத்தில் தமிழர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். எளிய குடும்பத்தைச் சேர்ந்த மீனவப் பெண்மணி. அத்தனை அழகாக பேசுகிறார். புள்ளி விவரங்களை அடுக்கிப் பேசுகிறார். அடுக்குமொழி பேசத் தெரியாதவர். ஆனால் உலுக்கி எடுத்தது இவரது ஒவ்வொரு பேச்சும்.
பாசக்கார அக்கா
காளியம்மாளின் பிரச்சாரம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இவருக்காக சீமான் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். தமிழக அளவில் மிகவும் கவனிக்கப்பட்ட முக்கிய வேட்பாளர்கள் வரிசையில் காளியம்மாளும் இடம் பிடித்ததே நாம் தமிழர் கட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். காளியம்மாள் 59,000 வாக்குகளைத் தாண்டி போய் விட்டார். இது மகத்தான சாதனைதான்.
புதிய சக்தி
இப்படி பெரிய கட்சிகளுக்கு மத்தியில் மக்கள் நீதி மய்யமும்,நாம் தமிழர் கட்சியும் புகுந்து விளையாடியிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. வருங்கால அரசியலின் தவிர்க்க முடியாத சக்திகள் இவர்கள் என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்து விட்டனர். டாக்டர் தமிழிசை சொல்வது போல இவர்களுக்குக் கிடைத்திருப்பது நிச்சயம் வெற்றிகரமான தோல்விதான்!