சலூன் கடைகாரரிடம் பேசும் மோடி 7 ஆண்டுகாலங்களில் ஏன் பத்திரிகையாளர்களிடம் பேசவில்லை? சீமான்
சென்னை: டெல்லியில் இருந்து தமிழகத்தின் சலூன் கடைகாரரிடம் பேசும் பிரதமர் மோடி இதுவரை 7 ஆண்டுகளில் ஒருமுறை கூட ஏன் பத்திரிகையாளர்களிடம் பேசவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு நாள் கொண்டாட்டங்களை தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் இன்று கொண்டாடினர். சென்னை வளசரவாக்கம் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் எல்லை போராளிகளுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மோடிக்கு கேள்வி
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பிரதமர் மோடி பாரதியார் பாடலை சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். இதனை எல்லாம் கேட்பதற்கு முன்னரே பாரதியார் மரணித்துப் போய்விட்டார். சலூன் கடைகாரரிடம் பேசுகிற பிரதமர் மோடி 7 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை ஒருமுறையேனும் சந்தித்திருக்கிறாரா?
தேவை இல்லாத பாஜக, காங்.
பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரே கொள்கைதான் இருக்கின்றன. இந்த மண்ணின் எந்த ஒரு பிரச்சனைக்கும் வராத பிரதமர் மோடிக்கு இந்த மக்களின் ஓட்டு எதுக்கு? எங்களைப் பொறுத்தவரை தமிழகத்துக்கு பாஜகவும் காங்கிரஸும் தேவை இல்லை என்பதுதான். நீதி அரசர்கள் ஆன்லைன் மூலமாக பணி செய்யும் போது மாணவர்கள் மட்டும் எப்படி ஒரே அறையில் பாடம் படிக்க முடியும்?
அரசியலுக்காக யாத்திரை
மதம் என்பதைத்தவிர பாஜகவுக்கு அரசியல் எதுவுமே இல்லை. நாட்டைவிட மதம் பெரிது என கருத தொடங்கினால் நாடு நாசமாவதை யாராலும் தடுக்க முடியாது என்றார் அம்பேத்கர். அயோத்தியில் ராமர், கேரளாவில் ஐயப்பனை வைத்து அரசியல் செய்ததை போல தமிழகத்தில் முருகனை கையிலெடுத்திருக்கிறது பாஜக. இத்தனை ஆண்டுகாலம் இல்லாமல் இப்போது எதற்கு வேல் யாத்திரை?
மக்களுக்கு பிரச்சனையே பாஜகதான்
இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சனைகளை மூடி மறைக்க வேலை எடுத்துக் கொண்டு 1 மாதம் பயணம் செய்கிறது பாஜக. மக்களின் பிரச்சனைகளுக்காக பாஜக ஒருபோதும் நின்றது இல்லை. மாறாக மக்களுக்கான பிரச்சனையே பாஜகவாகத்தான் இருக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்.