விவசாய கடன்களை தள்ளுபடி செய்யமாட்டோம்... சீமான் ஆவேச பேச்சு
சென்னை: பண மழையில் மக்களுக்கு முன்னால் நாங்கள் மங்கலாகிவிடுகிறோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வைத்தார். சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் "கரும்பு விவசாயி" சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சரிபாதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில், இன்று மாலை 5 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து வேட்பாளர்களையும் தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து சீமான் பேசினார்.
கார் தயாரிக்கும் முதலாளி வாழும் நாட்டில் சோறு தயாரிக்கும் விவசாயி மரணிப்பது பெரிய முரண் என்றும், பண மழையில் மக்களுக்கு முன்னால் நாங்கள் மங்கலாகிவிடுகிறோம் எனவும் தெரிவித்தார்.
நாங்கள் மற்ற கட்சிகளை போல் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டோம், ஆனால் விவசாயிகளை கடனாளியாக்க மாட்டோம் என்று கூறிய சீமான், நாட்டு மக்கள் பசியில்லாமல் இரவில் தூங்க நடவடிக்கை எடுப்பேன் என பிரதமர் வேட்பாளர்கள் மோடி, ராகுலால் உறுதி தர முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு புத்தகமும் வெளியிடப்பட்டது.