நாம் தமிழர் கட்சியினர் தைப்பூசம் கொண்டாட்டம் : தேன் தினைமாவு உருண்டை பிரசாதம் கொடுத்த சீமான்
தைப்பூசத்தை முன்னிட்டு சீமான் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருமுருகன் குடிலில் முருகவழிபாடு மற்றும் வேல்வழிபாடு நடைபெற்றது.
சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு சீமான் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருமுருகன் குடிலில் முருகவழிபாடு மற்றும் வேல்வழிபாடு நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் தேன் தினை மாவு உருண்டை, இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
தைப்பூசம் திருவிழா இன்று தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. முருகன் ஆலயங்களிலும் சிவ ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காவடிகள் எடுத்து வந்தும் அலகு குத்தியும் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆண்டு தோறும் தைப்பூசம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் தைப்பூசம் விழா திருமுருகத் திருநாளாக கொண்டாடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர்
கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:
தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, நமது இன மூதாதை! முருகன் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகன் திருநாளையொட்டி இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் தமிழர் மெய்யியல் மீட்புக்கான பாசறையான வீரத்தமிழர் முன்னணி சார்பாக தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர்கள் பரவி வாழும் நிலங்களிலும் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்பட்டுவருகிறது.
இதனையொட்டி நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் சட்டசபைத் தொகுதி மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக, இன்று 28-01-2021 வியாழக்கிழமையன்று காலை 09 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள திருமுருகன் குடிலில் சீமான் அவர்களின் தலைமையில் முருகவழிபாடு மற்றும் வேல்வழிபாடு நடத்தி, பொதுமக்கள் அனைவருக்கும் தேன்-தினை மாவு உருண்டை, இனிப்பு பொங்கல் வழங்கி திருமுருகத் திருநாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று முப்பாட்டன் முருகனின் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடினர். இந்த நிகழ்வை சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.