ராதாவுக்கு எண்ணெய் தடவி.. மசாஜ் செய்து.. நகைகளை அபேஸ் செய்த சவுமியா.. சிக்கினார்!
தொழிலதிபர் மனைவியிடம் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்
சென்னை: ராதாவுக்கு எண்ணெய் தடவி.. மசாஜ் செய்து.. 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையையும் கொள்ளையடித்த நர்ஸ் சவுமியாவை போலீசார் கைது செய்துவிட்டனர்.
தேனாம்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்த தொழிலதிபரின் மனைவிதான் ராதா. 65 வயதாகும் இவருக்கு கொஞ்ச நாளாகவே மூட்டு வலி உள்ளது.
அதனால் டாக்டரை போய் பார்த்ததில், 10 நாட்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, ஒரு ஏஜென்சி மூலம் சவுமியா என்ற நர்ஸை சென்ற மாதம் வீட்டுக்கு சிகிச்சைக்காக வரவழைத்துள்ளனர்.
சிகிச்சை
27 வயதான சவுமியா, ஒரு வாரமாக ராதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தார். கடந்த மாதம் 18-ம் தேதி, ராதாவிடம் உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளார். அதனால் அணிந்திருந்த நகைகளை கழற்றி பீரோவில் வைக்குமாறு ராதா சொல்லி உள்ளார்.
ரூ.7 லட்சம்
பிறகு உடம்பு முழுவதும் எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும், ராதா குளிக்க சென்றுவிட்டார். பாத்ரூமில் இருந்து வெளியே வந்து பார்த்தால் நர்ஸ் காணோம், பீரோவை திறந்து பார்த்தால் நகையும் காணோம். அவற்றின் மதிப்பு 7 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டது.
விசாரணை
உடனடியாக தேனாம்பேட்டை போலீசாருக்கு புகார் தந்தனர். விரைந்து வந்த போலீசாரும் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், நர்ஸ் வீட்டை விட்டு வேகவேகமாக டென்ஷனாக செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த நர்ஸ் யார், என்ன விவரம் சம்பந்தப்பட்ட ஏஜென்சியிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
புழல் ஜெயில்
இப்போது நர்ஸ் சவுமியாவை போலீசார் பிடித்துவிட்டார்கள். தலைமறைவாக இருந்த சவுமியா, விருகம்பாக்கத்திற்கு வந்திருப்பது அவரது செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சவுமியாவை கைது செய்ததுடன், அவரிடமிருந்த நகைகளையும் பறிமுதல் செய்து புழலில் அடைத்தனர். நர்ஸ் சவுமியா, அரும்பாக்கத்தில் பியூட்டி பார்லரும் நடத்தி வருபவர் என்று விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.