செவிலியர்கள் போராட்டம் வேதனை...நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுக - கமல்,டிடிவி தினகரன் ஆதரவு
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்
சென்னை: செவிலியர்கள் பணி முடிந்து விட்டது போல் சிதறடிப்பது நியாயமில்லை இவர்களின் கோரிக்கை நியாயமானது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இவர்களின் சேவை நமக்கு தேவை செவிலியர்களை பணியில் தக்க வைத்துக் கொள்வது நமது கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்
கொரோனா பணிக்காக மருத்துவ பணிநியமன ஆணையம் மூலமாக மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் செவிலியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மூன்று கட்டடங்களாக செவிலியர்கள் தற்காலிகமாக பணியில் சேர்க்கப்பட்டனர். முதல் மற்றும் மூன்றாம் கட்டத்தில் தற்காலிக பணி நியமன ஆணையை பெற்ற 2,750 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் கட்டமாக பணிநியமனம் செய்யப்பட்ட 3,485 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
இப்படியும் ஒரு அப்பாவா?.. பஸ் ஸ்டாண்டில் கதறிய 2 குழந்தைகள் மீட்பு.. திண்டுக்கல் எஸ்பி செய்த சபாஷ்
உண்ணாவிரதப் போராட்டம்
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவ சேவையாற்றிய தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நியாயமான போராட்டம்
இந்த நிலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், செவிலியர்களின் நியாயமான போராட்டத்தில் எங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம் என்று கூறினார்.
கமல்ஹாசன் பேட்டி
கொரோனா காலத்தில் செவிலியர்கள் சேவையின் பலனாக பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்னும் பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நேரத்தில் இவர்களின் பணி நமக்குத் தேவை என்று கூறிய கமல்ஹாசன், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் முடிந்து விட்டதாக அரசு கருத வேண்டாம் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.
அரசின் கடமை
கொரோனா தொற்றின் எண்ணிக்கை வேண்டும் ஆனால் குறைந்துள்ளது.ஆதலால் செவிலியர்கள் பணி முடிந்து விட்டது போல் சிதறடிப்பது நியாயமில்லை இவர்களின் கோரிக்கை நியாயமானது இவர்களின் சேவை நமக்கு தேவை செவிலியர்களை பணியில் தக்க வைத்துக் கொள்வது நமது கடமை அரசுக்கு பரிந்துரைக்கவே வந்துள்ளேன்.
கோரிக்கைகளை பூர்த்தி செய்க
ஒரு நல்ல அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமே தவிர இருக்கும் வேலைவாய்ப்புகளை குறைக்க கூடாது. அரசு இவர்களின் போராட்டத்தை கவனமுடன் அணுகி கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் போராட்டத்தை ஒரு சமூகமாக முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவே வந்துள்ளேன் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வேடிக்கை பார்ப்பது வேதனை
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தம் உயிரை பணயம் வைத்து மருத்துவ சேவையாற்றிய செவிலியர்களை போராட வைத்து தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பணி நிரந்தரம் உள்ளிட்ட செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். முதலமைச்சரோ அல்லது மருத்துவத்துறை அமைச்சரோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை உடனடியாக அழைத்து பேசி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.