ஹத்ராஸ் கொடூரத்தைவிட.. உங்களுக்கு தேர்தல் முக்கியமாகிவிட்டதே.. யோகியை போட்டு தாக்கும் நுஸ்ரத் ஜஹான்
சென்னை: மேற்கு வங்கத்தில் தீவிர இந்துத்துவ ஆதரவாளராக அறியப்படும் யோகி ஆதித்யநாத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை நுஸ்ரத் ஜஹானை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் முக்கிய கட்சிகள் அனைத்தும் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. இதனால் அக்கட்சியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாஜக களமிறங்கியுள்ளது. பல்வேறு பாஜக தலைவர்களும் மேற்கு வங்கம் மாநிலத்தை முற்றுகையிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உபியில் முதல்வர் யோகி
உத்தர பிரதேச முதல்வரும் தீவிர இந்துத்துவ ஆதரவாளராக அறியப்படும் யோகி ஆதித்யநாத் இன்று மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைகள் தடை செய்யப்படுகிறது. ரம்ஜான் காலத்தில் பசுக்கள் கொல்லப்படுவது கட்டாயமாக தொடங்கப்படுகிறது.
ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்
மேலும், பசு கடத்தலும் மாநிலம் முழுவதும் தொடர்கிறது. இதனால் பொதுமக்களின் உணர்வுகள் பாதிக்கப்படுகிறது. ஆனால், மாநில அரசோ அமைதியாக இருக்கிறது. இப்போது ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தைக் கூட தடை செய்ய முயற்சிகள் நடக்கிறது" என்று பேசினார். யோகி ஆதித்யநாத் மூலம் ஒட்டுமொத்தமாக இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்ய பாஜக முயல்கிறது.
திரிணாமுல் பதிலடி
இந்நிலையில், யோகி ஆதித்யநாத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திரிணாமுல் காங்கிரஸ் நுஸ்ரத் ஜஹானை களமிறக்கியுள்ளது. யோகி ஆதித்யநாத் உரையாற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில் நுஸ்ரத் ஜஹான் தனது ட்விட்டரில் ஹத்ராஸில் நடைபெற்ற சம்பவத்தைக் குறிப்பிட்டு, "பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசம் தற்போது எவ்வளவு மோசமாக மாறியுள்ளது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பாதுகாக்க யோகி அரசு ஏன் முன்னுரிமை அளிக்கவில்லை? அதைவிட பாஜகவுக்கு வங்காள தேர்தல் முக்கியமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
யார் இந்த நுஸ்ரத் ஜஹான்
மேற்கு வங்கத்தில் முன்னணி நடிகையாக இருந்த நுஸ்ரத் ஜஹான், சமீபத்தில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிறப்பால் இஸ்லாமியரான இவர், ஜெயின் மத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். ரமலான் மற்றும் துர்கா பூஜை என இரண்டையும் இவர் வெளிப்படையாகக் கொண்டாடுவார். மதநல்லினத்திற்கான அடையாளமாக விளங்கும் நுஸ்ரத் ஜஹானைதான், யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தற்போது களமிறக்கியுள்ளது.
ஹத்ராஸ் கொடூரம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இளம் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கவுரவ் சர்மா என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சிறையிலிருந்து வெளியே வந்தவர், போலீசில் புகாரளித்த பெண்ணின் தந்தையை, சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.