முடிவெடுத்துவிட்டாரா? நாளை முக்கிய ஆலோசனை.. பரபரப்பாகும் ஓபிஎஸ்ஸின் சென்னை இல்லம்
சென்னை: அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் அதிகரித்திருக்கும் நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நாளை முக்கிய ஆலோசனையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செப்டம்பர் 27ம் தேதி வெடித்த அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவகாரம் அக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 27ம் தேதிக்கு பிறகு அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை மாறி மாறி சந்தித்து வருகிறார்கள்.
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அவசரம் காட்டுகிறதா அதிமுக.. திடீரென இந்த குழப்பம் ஏன்?
அமைச்சர்கள் கோரிக்கை
அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக ஒபிஎஸ்ஐ அறிவிக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், இபிஎஸ்ஐ அறிவிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் குரல் எழுப்பி வருகிறார்கள். இதில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் வெளிப்படையாகவே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று கோரினார்கள். ஆனால் பின்னர் அமைதியாகி விட்டனர்.
கையெழுத்திடும் உரிமை
இந்நிலையில் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் , முதல்வர் போட்டியில் ஒதுங்குவதற்கு அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி தரப்பு சம்மதிக்கவில்லையாம். ஏனெனில் அப்படி செய்தால் அதிமுகவில் புதிய அதிகார தலைமை உருவாகும். அது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் ஏற்கவில்லையாம்.
அதிமுகவில் முழு அதிகாரம்
இல்லாவிட்டால் அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கையெழுத்திடும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஒபிஎஸ் தரப்பு கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கும் எடப்பாடி தரப்பு சம்மதிக்கவில்லை. ஏனெனில் அப்படி செய்தால் அதிமுகவில் முழு அதிகாரமும் ஒபிஎஸ் வசம் போய்விடும் என்பதால், அதை ஏற்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
ஒபிஎஸ் ஆலோசனை
இப்படி குழப்பங்கள் உச்சத்திலிருக்கும் நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்திலுள்ள பண்ணை வீட்டில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடந்த மூன்று நாட்களாக பல முக்கிய அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.இந்தநிலையில், இன்று இரவுக்குள் சென்னை வரும் ஓ.பி.எஸ்., கிரீன்வேஸ் சாலையிலிருக்கும் தனது இல்லத்தில் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையின் போது அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கப்பட வேண்டிய `யார் முதல்வர் வேட்பாளர்?' என்ற கேள்விக்கான விடை குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தன்னுடைய கோரிக்கைகளை ஏற்காவிட்டால் ஓ பன்னீர்செல்வம் என்ன மாதிரியான முடிவு எடுப்பார் என்ற பரபரப்பு நிலவுகிறது.
ஓபிஎஸ் ட்வீட்
எனினும் ஓபிஎஸ் இன்று காலை வெளியிட்ட ட்வீட் பதிவில், `தமிழக மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க தொண்டர்களின் நலனைக் கருத்தில்கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்திருக்கின்றன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!' என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது