ஓபிஎஸ் தம்பிக்கு காலையில் பதவி.. மாலையில் அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ்.. திடீர் அதிரடி!
ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை: துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அதிமுகவிலிருந்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் 4 சகோதரர்களில் ஒருவர் ஓ.ராஜா. தேனி வட்டாரத்தில் இவர் மிகவும் பிரபலம். ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கை வைத்தே பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவியை பிடித்தவர்.
இவர் மீது ஏற்கனவே நிறைய புகார்கள் உள்ளன. கோயில் பூசாரி நாகமுத்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கும் உள்ளானவர் ராஜா.
அடிக்கடி சர்ச்சைகள்
இதை தவிர அதிகாரிகளை மிரட்டுவது, வைகை ஆற்றுப்படுகையில் திருட்டு மணல் அள்ளி விற்பது என்று ஏராளமான குற்றச்சாட்டுகள் ராஜா மீது இருக்கிறது. இதனால் நிறைய தருணங்களில் இவர் மீது சர்ச்சைகள் எழுந்தவாறே இருக்கும்.
கட்சிக்கு களங்கம்
இந்த நிலையில் ஓ. ராஜா கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக இதனை அறிவித்துள்ளனர். அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதால் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டுள்ளது.
அதிரடி டிஸ்மிஸ்
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் ஆகியோர் தற்போது தீவிரமாக தேனி மாவட்டத்தில் களம் இறங்கி உள்ளனர். அதோடு சொந்த தொகுதி என்பதால் துணை முதல்வருக்கு உதவியாகவும் பல்வேறு வகைகளில் தங்களை ஈடுபடுத்தி வரும் நிலையில் அவரது தம்பி ஓ.ராஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாலை பதவி பறிப்பு
இன்று காலைதான் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் ஒன்றியத் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார் ஓ.ராஜா. ஆனால் மாலையில் கட்சியை விட்டு தூக்கப்பட்டுள்ளார். இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் மிகப் பெரிய அளவில் ஏதோ நடந்திருப்பதாக கருதப்படுகிறது.