ஜா அணி, ஜெ அணி நியாபகம் இருக்கா? இரட்டை இலை முடங்கும்! அடித்து சொல்லும் "எக்ஸ்பர்ட்".. என்ன நடந்தது?
எதிர்காலத்தில் பாஜக எடப்பாடியுடன் தனியாக கூட்டணி, இன்னொரு பக்கம் ஓபிஎஸ்ஸுடன் தனியாக கூட்டணி என்று வைத்து இருப்பார்கள் அரசியல் விமர்சகர் காந்தி ராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது. ஓபிஎஸ் பெரிய ஆளா? இபிஎஸ் பெரிய ஆளா என்று தெரியவில்லை. யாரை ஆதரிப்பது என்று தெரியாமல் உள்ளனர், அரசியல் விமர்சகர் காந்தி ராஜ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. இந்த பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் மேல்முறையீடு வழக்கு ஆகும். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாளை இந்த வழக்கில் விசாரணை நடக்க உள்ளது. இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பும் மனு தாக்கல் செய்ய உள்ளது.
இரட்டை இலை சின்னம் சிக்கலில் உள்ள நிலையில் இந்த மோதல் தொடர்பாக அரசியல் விமர்சகர் காந்தி ராஜ் ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மோடி, அமித் ஷா, ஆளுநர் ரவி.. மூவருக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி உண்மையாக உள்ளார்.. உதயநிதி பேச்சு!
எடப்பாடி தரப்பு
அவர் அளித்துள்ள பேட்டியில், எடப்பாடி தரப்பிற்கு இரட்டை இலையை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் என்னை பொறுத்தவரை அவர்களுக்கு இரட்டை இலை கிடைக்காது. என்னுடைய யூகம் அதுதான். பாஜக இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது. ஓபிஎஸ் பெரிய ஆளா? இபிஎஸ் பெரிய ஆளா என்று தெரியவில்லை. யாரை ஆதரிப்பது என்று தெரியாமல் உள்ளனர். பாஜகவினர் தேர்தலில் முறைகேடுகளை செய்து வருகின்றனர். இப்போது நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இப்போது மக்கள் ஆதரவு அதிகம் உள்ளவர்களை பாஜக எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து, மக்கள் ஆதரவால்தான் நாங்கள் வென்றோம் என்று பாஜக காட்டிக்கொள்ள முடியும்.
அண்ணாமலை
ஏனென்றால் அண்ணாமலைக்கு வரும் கூட்டத்தை எல்லாம் நாம் பார்க்கிறோம். கட்சி வளர்ந்துவிட்டது என்று அவர்கள் சொல்கிறார்கள். நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். அவ்வளவுதான். அவருக்கு பின்னாடி ஆட்கள் இருக்கிறது என்கிறார்கள். இதெல்லாம் நம்பும்படியாக இல்லை. அவர் வளர்ந்துவிட்டதாக பிரம்மையை ஏற்படுத்தி வருகிறார்கள். நாளை பாஜக வெற்றிபெற்றால், மக்கள் சந்தேகப்பட கூடாது என்று இப்படி பிரம்மையை ஏற்படுத்துகிறார்கள். பாஜக வளர்ந்துவிட்டது என்று சொன்னால்தான் நாளை பாஜக வெல்லும் போது முறைகேடு பற்றி மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்.
ஓபிஎஸ் - எடப்பாடி
ஓபிஎஸ் - எடப்பாடி என்று இரண்டு தரப்பை உருவாக்கியது இவர்கள்தான். ஒரு சமயம் எடப்பாடியை இவர்கள் சப்போர்ட் செய்தனர். அதன்பின் ஓபிஎஸ்சை சப்போர்ட் செய்தனர். இப்படி மாறி மாறி இவர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர். அவர்கள் பிரித்தே வைத்து இருந்தது பாஜகதான். அவங்க இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்தால் இருவரும் பாஜகவின் பேச்சை கேட்க மாட்டார்கள். அதிமுக பெரிய கட்சியாகிவிடும். அதனால் அப்படி நடக்க விடாமல் பாஜக தடுத்துக்கொண்டு இருக்கிறது. இருவரும் ஒன்று சேர்ந்தால் பாஜகவை மிரட்டுவார்கள் என்பதால் இவர்களை பிரித்தே வைத்து இருக்கிறார்கள்.
பாஜக
இருவரையும் பிரித்து வைத்தால், இரண்டு பேரும் பாஜகவிற்கு கீழ் இருப்பார்கள். இருவரையும் பிரித்து வைத்துக்கொண்டு அவர்களுடன் தனி தனியாக பாஜக கூட்டணி வைக்கும். இதனால் வைக்கும் சிதறாது. அதே சமயம் அதிமுக சிறிய கட்சியாகவும் இருக்கும். அதாவது பிரித்தாளும் சூழ்ச்சி. இவர்களை பிரித்து வைத்துக் கொண்டு தனி தனியாக இவர்களோடு கூட்டணி வைத்துக்கொள்வார்கள். எடப்பாடியுடன் தனியாக கூட்டணி, இன்னொரு பக்கம் ஓபிஎஸ்ஸுடன் தனியாக கூட்டணி என்று வைத்து இருப்பார்கள்.
கூட்டணி
இவர்களுக்கு ஏன் சின்னம் கிடைக்காது என்று நான் சொல்ல காரணம் இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் தங்களை பெரிய ஆட்களாக காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் சின்னம் முடக்கப்படும். பொதுவான சின்னத்தில் இவர்களில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்று பார்ப்பார்கள். ஜா அணி, ஜெ அணி இருந்த போது சின்னத்தை முடக்கினார்கள். ஜெயலலிதா அதில் வென்றார். அதேபோல் இப்போதும் சின்னத்தை முடக்குவார்கள். பொதுவான சின்னத்தில் இவர்களில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்று பார்ப்பார்கள். அவர்களை பாஜக சப்போர்ட் செய்யும், என்று அரசியல் விமர்சகர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.