‘வோட் பேங்க்’.. ஓபிஎஸ் போட்ட கணக்கில் பாசிட்டிவ் ரிசல்ட்.. வேகம் கூடுதாம்.. ‘ஷாக்’கில் ஈபிஎஸ் டீம்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுச் செயலாளர் தேர்தலை இப்போதைக்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் வேகம் காட்டி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த நியமனத்தில் சில 'சமூக' கணக்குகளையும் போட்டு வருகிறாராம் ஓபிஎஸ்.
ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகளை பல்வேறு பதவிகளுக்கு நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அந்தந்த பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் சமூகம் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் கருத்தில் கொண்டு நிர்வாகிகளை நியமித்து வருகிறார் ஓபிஎஸ்.
விழுப்புரம், கடலூர், ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்து சமீபத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார். அங்கெல்லாம், ஈபிஎஸ் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகள் வேகமெடுத்துள்ளதாம்.
இந்நிலையில், தற்போது திருச்சி மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர்கள் வரை மொத்தமாக தனது ஆதரவாளர்களை நிர்வாகிகளாக நியமித்து அதிரடி காட்டியிருக்கிறார் ஓபிஎஸ்.
தங்கமணி ஆவேசத்துக்கு மூல காரணமே இதானா..? கொங்கு மண்டலத்தில் 'கொக்கி' போட்ட ஓபிஎஸ்.. பக்கா மூவ்!
வேகமெடுத்த ஓபிஎஸ் டீம்
உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு, தாங்கள் பொதுக்குழு வழக்கு விசாரணை முடியும் வரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக இந்த வழக்கு நவம்பர் மாதம் விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, இரு தரப்பினருமே கட்சிக்குள் தங்களது தரப்பை வலுப்படுத்தும் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றனர்.
புதிய நிர்வாகிகள்
ஓ.பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை நியமித்து தனது தரப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் வேகமாக இறங்கியுள்ளார். தலைமைக் கழக நிர்வாகிகள், கட்சியில் உள்ள பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். விழுப்புரம், கடலூர், ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவள்ளூர், கரூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு அதிமுகவின் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
மா.செக்கள் கூட்டம்
அனைத்து மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும் நியமித்த பிறகு சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டு வருகிறார். விரைவில் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார் எனவும் சமீபத்தில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். இதற்கிடையே வரும் 10ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த உள்ளது.
திருச்சியில் ஒட்டுமொத்தமாக
இந்நிலையில், திருச்சி மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு அவைத்தலைவராக கே.கே.மகாலிங்கம், இணைச்செயலாளர், துணை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதே போல திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு அவைத்தலைவராக கோபாலகிருஷ்ணனையும், இணைச் செயலாளராக கவிதாவையும் நியமித்துள்ளார்.
மகளிரணி
மேலும் திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவராக அ.மகாலிங்கத்தையும், இணைச்செயலாளராக முத்துகுமாரியையும் நியமித்துள்ளார். இதேபோல திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய செயலாளர்களையும் ஓபிஎஸ் புதிதாக நியமித்துள்ளார். மேலும், வளசை மஞ்சுளா பழனிசாமியை கழக அமைப்புச் செயலாளராகவும், ஜெயதேவி, இறை தாமரை ஆகியோரை மகளிர் அணி துணைச் செயலாளர்களாகவும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ்.
கிரவுண்ட் வொர்க்
ஓபிஎஸ்ஸின் இந்த நிர்வாகிகள் நியமனத்தில், பயங்கரமான கிரவுண்ட் வொர்க் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. உதாரணமாக ஒரு மாவட்டத்தில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பெரிய வாக்கு வங்கியாக இருக்கிறார்கள் என்றால், ஈபிஎஸ் தரப்பில் மாவட்ட செயலாளராக எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் இருக்கிறாரோ, அதை விட்டு இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவருக்கு ஓபிஎஸ் மாவட்ட செயலாளர் பதவியைத் தருகிறாராம்.
பயங்கர பிளான்
இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கும் ஆதரவாளர்களை அப்படியே நைஸாக நம் பக்கம் திருப்பி விடலாம் எனக் கணக்குப் போட்டிருக்கிறாராம் ஓபிஎஸ். மேலும் சில மாவட்டங்களை மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி என்கிற ரீதியிலும் அப்பாயிண்ட்மெண்ட்கள் நடந்திருக்கின்றன. இதனால், எல்லோரையும் திருப்தி படுத்தலாம் எனக் கணக்குப் போட்டிருக்கிறார் ஓபிஎஸ்.
பாசிட்டிவ் ரிசல்ட்
சில மாவட்டங்களில், ஓபிஎஸ்ஸின் இந்தக் கணக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸின் இந்த கணக்கு நல்ல ரிசல்ட்டை கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர். ஓபிஎஸ்ஸின் இந்த திட்டத்தை முறியடிக்க ஈபிஎஸ் என்ன முயற்சியை கையில் எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.