தமிழ்நாடே கடும் வறட்சியில இருக்கு.. ரூ1000 கோடி உடனே தாங்க... மத்திய அரசுக்கு ஒபிஎஸ் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியை சமாளிக்க ரூ1,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என டெல்லி நிதி அமைச்சர்கள் மாநாட்டில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். காவிரி-கோதாவரி இணைப்புக்கு இந்த பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்க வேண்டும் என்றும், கஜா புயல் பாதிப்பு சீரமைப்புக்கு நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் முதல் பட்ஜெட்டை விரைவில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டினை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்களை கேட்டு வருகிறார். இதேபோல் மாநிலவாரியாக இடம் பெற வேண்டிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் குறித்து நிர்மலா சீதாராமன் ஆலோசிக்க விரும்பினார். இதற்காக இன்று காலை நிதியமைச்சர் மாநாடு தொடங்கியது. இதில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியை சமாளிக்க ரூ1,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். காவிரி-கோதாவரி இணைப்புக்கு இந்த பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்க வேண்டும். ஆனைகட்டி குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அவசியம். கஜா புயல் பாதிப்பு சீரமைப்புக்கு மத்திய அரசு ரூ6000 கோடி நிதி ஒதுக்க வேண்டும். தமிழகத்துக்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான 4 ஆயிரத்து 458 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.