ஓபிஎஸ் நிச்சயம் பாஜகவுக்கு முக்கியம்தான்.. தமிழகத்தில் பன்னீரை வைத்து தாமரைக்கு தண்ணீர் ஊற்றிய மோடி!
சென்னை: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நிச்சயம் பிரதமர் மோடிக்கு "பன்னீர்" தான். திராவிடம் என்ற இரும்புக்கோட்டைக்குள் இதுவரை பெரிதாக தாமரையை வளர்க்க முடியாமல் தவித்து வந்த நிலையில் பன்னீரை வைத்து தான் மோடி தாமரைக்கு தண்ணீர் ஊற்றி உள்ளார். இதன் பலன் என்னவென்பது வரும் மே 23ம் தேதி தெரிந்துவிடும்.
ஜெயலலிதா மீதான விசுவாசத்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் அப்படியே பிரதமர் மோடியிடம் காட்டியதால், தன்னை முதல்வர் பதவியில் இருந்து தூக்கிய சசிகலா குடும்பத்தை பிரதமர் மோடியின் உதவியுடன் மொத்தமாக தூக்கி விட்டார் பன்னீர்செல்வம்.
இதன் மூலம் சசிகலா குடும்பம் இல்லாத அதிமுக என்ற தனது லட்சியத்தை அடைந்தும் விட்டார் ஓ பன்னீர்செல்வம்.
எல்லாமே செட்டப்பு... அவ்வளவும் நடிப்பு.. மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மீது தமிழிசை கடும் பாய்ச்சல்
பல திட்டங்கள்
இதற்கு கைமாறாக தமிழகத்தில் மோடி பல திட்டங்களை தமிழகத்தில் சாதித்துக்கொண்டார். உதாரணமாக சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு அனுமதி, தமிழகத்தில் மீத்தேன் ஆய்வுக்கு அனுமதி, நீட் தேர்வு, மதுரவாயல் பறக்கும் நெடுஞ்சாலை, உதய் மின்திட்டம் என பலதிட்டங்களை மோடி செயல்படுத்திவிட்டார்.
பாஜக கூட்டணி
ஆட்சி நிர்வாகம் ஒருபக்கம் எனில், பாஜகவை வளர்க்கவும் மிகப்பெரிய உதவி செய்துள்ளார் மோடி. அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற நிச்சயம் ஓபிஎஸ்ஸின் துணையும் ஒரு காரணம். சென்ற முறை ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி அமைக்க மறுத்த நிலையில் அவர் இல்லாத நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது.
ஜெ. இடத்தில் மோடி
பாஜக அதிமுகவுடனான உறவை வெறும் கூட்டணி உறவாக அல்லாமல் தந்தை மகன் என்ற அளவுக்கு பன்னீர் இப்போது மாற்றி உள்ளார். ஒரு காலத்தில் சிவசேனா-பாஜக இருந்ததைப்போல் இப்போது பாஜகவும் அதிமுகவும் மாறிவிட்டன. ஜெயலலிதா இடத்தை மோடி கைப்பற்றிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு கூட்டணி இப்போது உள்ளது.
மோடி பிரச்சாரம்
தமிழகத்தில் தாமரை மலர தண்ணீர் ஊற்றிய பன்னீர்செல்வத்திற்கு பிரதிபலனாக அவரது மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரதமர் மோடியே வந்து பிரச்சாரம் செய்தார். ஊரே தேனியில் வாக்காளர்களுக்கு பணமழை கொட்டுவதாக புகார் கூறிய போதும், சற்றும் தேனி பக்கம் தேர்தல் ஆணையம் திரும்பி பார்க்காததை கவனிக்கத்தான் வேண்டும்.
வாரணாசியில் மோடி
இதற்கு கைமாறாக வாரணாசியில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் மகன் ரவீந்திரநாத்துடன் பன்னீர்செல்வம் பங்கேற்றார். அதை வைத்து தங்கதமிழ்செல்வன், பன்னீர்செல்வம் பாஜகவில் சேரப்போவதாக கிளப்பிவிட்டதால் கடைசியில் என் உயிர் போகும் போது அதிமுக கொடியை போடுங்கள் என விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
தயவு தேவை
பல விமர்சனங்களை தாண்டி, பிரதமர் மோடிக்கு பன்னீர் தயவும், துணை முதல்வர் பன்னீருக்கு மோடியின் தயவும் தேவை என்பதாலேயே இருவரும் இணைந்து செயல்படுகிறார்கள். ஏனெனில் இவற்றின் காரணங்களை மக்கள் அனைவருமே அறிவர் என்பதால்.. இதற்கு மேல் இதில் சொல்ல வேண்டியதில்லை. கவுண்டமணி பாஷையில் சொல்வதென்றால் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...