இது என்ன? ‘5ஐ விட 10 பெருசு’.. பேப்பர் பண்டலை தட்டிக்காட்டி எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த ஓபிஎஸ் டீம்!
சென்னை : கருணாநிதியை புகழ்ந்து ஓபிஎஸ் பேசியதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என ஈபிஎஸ் தரப்பினர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், சட்டமன்ற உரைகளை ஆதாரத்தோடு எடுத்துக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர்.
ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் தீர்மானத்தில் பேசும்போது தனது தந்தை கருணாநிதியின் பரம ரசிகர் என்றும், தான் பராசக்தி வசனத்தை படிப்பேன் என்றும் உருக்கமாகப் பேசினார்.
அதிமுக மோதல் தொடங்கிய பிறகு, இந்த விஷயத்தையும் குறிப்பிட்டு ஓபிஎஸ்ஸை விமர்சித்த ஈபிஎஸ் ஆதரவாளர்கள், அரசியலில் நாளெல்லாம் எதிர்க்கும் தலைவரை இப்படி ஓபிஎஸ் பாராட்டிப் பேசியதை தொண்டர்கள் விரும்பவில்லை என்றார்கள்.
'வோட் பேங்க்'.. ஓபிஎஸ் போட்ட கணக்கில் பாசிட்டிவ் ரிசல்ட்.. வேகம் கூடுதாம்.. 'ஷாக்'கில் ஈபிஎஸ் டீம்!
தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பினர் பலரும் இந்த விமர்சனங்களை வைத்து வந்த நிலையில், ஓபிஎஸ்ஸாவது 5 நிமிடம் தான் கருணாநிதியை பாராட்டிப் பேசினார், ஈபிஎஸ் 10 நிமிடங்கள் கருணாநிதியை வானளாவப் புகழ்ந்தாரே எனச் சுட்டிக்காட்டுகிறது ஓபிஎஸ் தரப்பு.
மாறி மாறி
அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் இரு அணிகள் உருவாகியுள்ள நிலையில் இரு தரப்பும் மாறி மாறி எதிர் தரப்பை விமர்சித்து பேசுவது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. திரைக்குப் பின்னால் நடந்த நிகழ்வுகளும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. நாள்தோறும் இரு அணிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
துரோகம்
ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் தீவிரமாக எழுந்தது முதலே, ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற விமர்சனத்தைக் கூறி வருகிறது எடப்பாடி தரப்பு. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததையும், திமுக ஆட்சியை பாராட்டியதையும் விமர்சித்து வருகின்றனர். மேலும், சட்டமன்றத்தில் கருணாநிதி நினைவிடம் அமைக்கும் தீர்மானத்தின் மீது பேசும்போது, தனது அப்பா கருணாநிதியின் பக்தர் என்றும், தான் அவரது பராசக்தி வசனங்களை மனப்பாடம் செய்வேன் என்றும் பேசினார். இதையும் ஈபிஎஸ் தரப்பினர் விமர்சித்து, திமுகவோடு இணக்கமாகிவிட்டார் ஓபிஎஸ் எனக் கூறி வருகின்றனர்.
திமுகவுடன் கூட்டு
துரோகத்தின் அடையாளமாக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். மகன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அரசைப் பாராட்டினால், அப்பா, கருணாநிதியின் ரசிகன் என்று சட்டமன்றத்திலேயே கூறுகிறார். இவர்களை அதிமுக தொண்டன் எப்படி ஏற்றுக்கொள்வான்? ஜெயலலிதா மறைவு வரை ஓபிஎஸ் இப்படி கருணாநிதியை பாராட்டி பேசியிருப்பாரா, இப்போது திமுகவுடன் கூட்டு சேர்ந்துவிட்டனர், அதனால் அவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை என ஈபிஎஸ் தரப்பு சீனியர்கள் பேசி வருகின்றனர்.
பேப்பர் பண்டல்
இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் நேற்று பிரஸ் மீட்டுக்கு ஒரு பேப்பர் பண்டலோடு வந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர். ஈபிஎஸ் தரப்பின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அவர், ஓபிஎஸ் கருணாநிதியை பாராட்டிப் பேசிய விஷயத்துக்கு வந்தார். சட்டமன்றத்தில் ஓபிஎஸ் பேசியதையும், ஈபிஎஸ் பேசியதையும் பிரிண்ட் போட்டு எடுத்து வந்து வரிக்கு வரி வாசித்துக் காட்டிய ஜேசிடி பிரபாகர், நீங்களே, யார் பேசுவது கருணாநிதியை அதிகமாக வியந்தோதுவது போல இருக்கிறது எனப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
ஓபிஎஸ் பேச்சு
ஓபிஎஸ் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை பாராட்டி பேசியதாக கூறுகின்றனர். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தில் ஓபிஎஸ் பேசியபோது, மொத்தம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசி இருந்தார். அவருடைய பேச்சு திமுக பக்கம் சாய்வது போல் அதிமுக தொண்டரை புண்படுத்துவது போல் இருக்கிறதா என்று அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். வேண்டுமென்றே அபாண்டமாக ஓபிஎஸ் திமுகவை ஆதரித்து பேசியதாக கூறி வருகிறார்கள்.
ஈபிஎஸ் பேசிய 10 நிமிடங்கள்
ஆனால் அதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி, கருணாநிதியின் இரங்கல் தீர்மானத்தில் பத்து நிமிடங்கள் பேசியிருந்தார். அப்போது, தமிழ்நாட்டு அரசியல் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்தவர் கருணாநிதி. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட சில திட்டங்களையும், இயற்றப்பட்ட சில சட்டங்களையும், மேற்கொண்ட நடவடிக்கைகளையும் மக்கள் நலன் கருதி அதிமுக சார்பில் நாங்கள் வரவேற்று இருக்கிறோம். ஒருவர் பிறக்கிறார், வாழ்கின்றார், மறைகின்றார். அந்த இடைப்பட்ட காலத்திலே செய்த சாதனை என்றைக்கும் இந்த மண்ணிலே நிலைத்திருக்கும். அந்த வகையிலே, கருணாநிதி சாதனை இந்த மண்ணிலே நிலைத்திருக்கும் எனப் பேசினார்.
அபாண்டம் - சதி
ஓபிஎஸ் 5 நிமிடங்கள் பேசினார். ஈபிஎஸ் 10 நிமிடங்கள் பேசினார். இருவர் பேசியதுமே நான் தவறு என்று கூறவில்லை. ஆனால் ஓபிஎஸ் பேசியதை மட்டும் வைத்துக்கொண்டு அவர் திமுகவுக்கு ஆதரவாக பேசினார். அதனால் ஓபிஎஸ் பதவியில் இருக்கக் கூடாது என்று சதித்திட்டம் தீட்டுகின்றனர். எனவே வரும்காலங்களில் இது போன்ற அபாண்டமாக குற்றச்சாட்டுகளை வைத்து தொண்டர்களை எங்களிடம் இருந்து பிரிக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது" எனப் பதிலடி கொடுத்தார் ஜேசிடி பிரபாகர். ஓபிஎஸ் தரப்பு, சட்டமன்ற உரையை ஆதாரமாக கொண்டு வந்து அட்டாக் செய்திருப்பதால் ஈபிஎஸ் தரப்பினர் ஷாக் ஆகியுள்ளனர்.