குலதெய்வம் பேச்சியை வணங்கி ஆட்டத்தை தொடங்கும் ஓபிஎஸ்.. “வேட்பாளர் யார்?” சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்
இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் தனது குலதெய்வம் பேச்சியம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார்.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து, தனது குலதெய்வமான செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோவிலுக்கு சென்று பூஜை செய்தார்.
எப்போதும், தேர்தல் நேரத்தில் தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்று ஆசி பெற்ற பின்னரே தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் ஓ.பன்னீர்செல்வம்.
அந்தவகையில், ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஓபிஎஸ் தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது. தொடர்ந்து, தனது ஈரோடு இடைத்தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டி..டிடிவி தினகரன் உறுதி..நாளை வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் தேர்தல் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். திமுகவில் தேர்தல் பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டு அவர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமாகா போட்டியிட்ட நிலையில், இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிடுகிறோம் என கேட்டு வாங்கினார் எடப்பாடி பழனிசாமி.
போட்டா போட்டி
மேற்கு மண்டலம் என்பதால் எடப்பாடி அணி தங்கள் பலத்தை நிரூபித்து ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்க திட்டமிட்டது. அதேசமயம், ஓ.பன்னீர்செல்வமுமும், அதிமுகவுக்கு உரிமை கோரும் தனது முயற்சியில் பின்வாங்காமல், தங்கள் அணியும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பினருமே, கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். இதில் பாஜக யாரை ஆதரிக்கப் போகிறது என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஓபிஎஸ் ஈபிஎஸ் திட்டம்
அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் மா.செக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவித்த பிறகே நாம் அறிவிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். வாக்கு வங்கி பலத்தைப் பொறுத்து வேட்பாளரை நிறுத்தலாம் என்று ஓபிஎஸ் தரப்பு நினைக்கிறது. அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ, அதைப் பார்த்துவிட்டு பின்னர் நாம் வேட்பாளரை அறிவிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வேட்பாளர் அறிவிப்பு தாமதம்
அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டாகப் பிளவு பட்டு இருப்பதால் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்க, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்கள் அணியின் வேட்பாளர்களை நிறுத்துவதில் கால தாமதம் செய்து வருகின்றனர். பாஜக ஆதரவை உறுதி செய்வதில் இரு தரப்பினருமே முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தேர்தல் போட்டி மட்டுமல்லாது ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான அதிகார யுத்தத்திலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய இடைத்தேர்தல் என்பதால் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
படை பட்டாளம்
அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினர் வேட்பாளரை இன்னும் அறிவிக்காவிட்டாலும் பூத் கமிட்டி தொடர்பான கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தேர்தல் பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த தேர்தல் பணிக்குழுவுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இன்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு அருகே நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், தமாகாவின் விடியல் சேகர், எம்.யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவிலுக்கு ஓபிஎஸ் பயணம்
இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று சிறப்பு தரிசனம் செய்தார். இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருவதால் தமிழ்நாடு அரசின் சின்னமாக உள்ள கோபுரம் அமைந்திருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வெடிகுண்டு பாதுகாப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓபிஎஸ் மற்றும் அவருடன் வந்த ஆதரவாளர்களும் சோதனைக்குப் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
குலதெய்வம் கோவிலுக்கு
தொடர்ந்து செண்பகத்தோப்பில் அமைந்துள்ள அவரது குலதெய்வம் பேச்சியம்மன் கோவிலுக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். தனது பிரச்சார வாகனத்தையும் ஓபிஎஸ், தனது குலதெய்வம் கோவில் இருக்கும் செண்பகத்தோப்புக்கு முன்பே அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எப்போதும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது ஓபிஎஸ்ஸின் வழக்கம்.
பேச்சியம்மன் ஆசி பெற்று
அந்தவகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னதாகவே தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார் ஓபிஎஸ். பேச்சியம்மன் ஆசி பெற்ற பின்னர் ஓபிஎஸ் தேர்தல் பணிக்குழுவை அறிவித்து, வேட்பாளர் பெயரையும் அறிவித்து, ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்தை தொடங்குவார் எனக் கூறப்படுகிறது.
விரைவில் வேட்பாளர்
குலதெய்வம் பேச்சியம்மன் கோவிலில் வழிபட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், வழக்கம்போல் சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு வருகிற 31-ஆம் தேதி முதல் தொடங்குவதால், அதிமுக சார்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார். இதனால், ஈரோடு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.