செம ட்விஸ்ட்.. வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியோடு கூட்டணி.. ஓபிஎஸ் ஒரே போடு.. அப்போ முதல்வர் யார்?
சென்னை: தமிழக அரசியலின் புதிய டுவிஸ்டாக, வாய்ப்பு இருந்தால் ரஜினிகாந்த் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் புதிதாக கட்சி துவங்க உள்ளதாகவும், டிசம்பர் 31ம் தேதி அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான், சேலத்தில் நிருபர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர், முழுமையாக ரஜினிகாந்த் பேசியதை பார்த்து, ஆலோசித்து கருத்து கூறுகிறேன் என்று தெரிவித்தார்.
கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது அரசியலுக்கு வரும் துணிச்சலைப் பெறாத ரஜினிகாந்த்!
ஓபிஎஸ் பேட்டி
இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிறந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கியதை வரவேற்கிறேன். அவருடைய வரவு நல்வரவாகட்டும்.
கூட்டணிக்கு வாய்ப்பு
அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். வாய்ப்பு இருந்தால் ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி அமையும். இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த பேட்டிதான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடியார்தானே முதல்வர் வேட்பாளர்
ஏற்கனவே, அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட இழுபறிக்குப் பிறகு பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பதை ஏற்றுக்கொண்டார் என்று கூறப்பட்டது. இதன் பிறகுதான், ஒருமனதாக எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
முதல்வர் யார்?
ஆனால் இப்போது, அதிமுக, ரஜினி கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக பன்னீர்செல்வம் தெரிவிப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு அதிமுகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைப்பாரா? ரஜினிகாந்த் தலைமையில், ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் அவரது கட்சியினரின் விருப்பம். 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக ரஜினிகாந்த் அறிவித்தாரே, அது என்ன ஆயிற்று? ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதுதானே ரஜினி கோஷம், பிறகு எப்படி எடப்பாடி ஆட்சியே மீண்டும் வர ரஜினி கூட்டணி வைப்பார், என்ற பல்வேறு கேள்விகளை பன்னீர்செல்வத்தின் பேட்டி, எழுப்பியுள்ளது.