முதல்வர் வேட்பாளர் OPS? ஆசையை தூண்டும் சசிகலா! காய் நகர்த்தும் TTV! என்ன செய்வார் EPS?
சென்னை: அதிமுகவில், சசிகலாவை சேர்ப்பதற்கு அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் யோசிக்கும் பின்னணியில் முக்கியமான இரு காரணங்கள் இருக்கிறது என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சில தினங்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று ஒரே போடாக போட்டார்.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த ஒற்றை பேட்டி, தமிழக அரசியலில்.. குறிப்பாக அதிமுக வட்டாரத்தில்.. இரண்டு மூன்று நாட்களாக காட்டு தீ போல பரவி விவாதிக்கப்பட்டு வருகிறது.
யோசனையில் எடப்பாடி
ஜெயக்குமார், முனுசாமி போன்ற சீனியர்கள் பன்னீர்செல்வம் இப்படி பேசியிருக்க கூடாது என்று பகிரங்கமாக எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர். அதிர்ச்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் யோசனையில் மூழ்கி இருக்கிறார். அவர் யோசனைக்கு காரணம் சசிகலாவை சேர்ப்பதா வேண்டாமா என்பது பற்றி கிடையாது. பன்னீர்செல்வம் திடீரென்று இப்படி பேசி விட்டாரே என்பதை பற்றிதான்.
தென் மாவட்டங்கள்
ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு தென் மாவட்ட அதிமுக முக்கிய பிரமுகர்களான செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இத்தனை நாட்கள் இல்லாமல் பன்னீர்செல்வம் ஏன் இப்படி ஒரு கருத்தை தெரிவித்தார் என்பது பற்றி சில அரசியல் விமர்சகர்களிடம் கேட்டோம். அவர்கள் கூறியதன் கருத்து தொகுப்பு இதோ: சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக மோசமாக தோற்றது. எப்போதுமே தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு நல்ல ஆதரவு மட்டும் உண்டு. குறிப்பாக முக்குலத்தோரின் கணிசமான ஓட்டுக்கள் அதிமுக பக்கம் வந்துகொண்டு இருந்தன. ஆனால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய எடப்பாடி அரசின் முடிவு காரணமாக தென் மாவட்டங்களில் இந்த முறை அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அதிமுக முக்கிய தலைவர்களே எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தின்போது சுட்டிக் காட்டி பேசியதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.
எல்லை மீறிய விமர்சனங்கள்
இன்னொரு பக்கம் சசிகலாவை எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்திய மற்றும் பேசிய விதம் சரியில்லை என்ற அதிருப்தி முக்குலத்தோர் இடையே இருக்கிறது. தர்மயுத்தம் நடத்தியபோது சசிகலாவை பன்னீர்செல்வம் எதிர்த்து இருந்தாலும் கூட ஒரு அளவுக்கு மேலே சென்று அவர் விமர்சனம் செய்தது கிடையாது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் மிக மோசமான வார்த்தைகளால் சசிகலாவை விமர்சனம் செய்து வருகின்றனர். சூரியனை பார்த்து... என்ற வார்த்தையை எடப்பாடியும், கொசு என்ற வார்த்தையை ஜெயக்குமாரும் பயன்படுத்தினர். இதை சசிகலா சார்ந்த சமுதாயத்தினர் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
Recommended Video
உள்ளாட்சித் தேர்தல்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், திருநெல்வேலி, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் திமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுகவின் அடிப்படை வாக்குவங்கி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இப்படியே போனால் லோக்சபா தேர்தல், பிறகு அடுத்த சட்டசபை தேர்தல் களிலும் இதுதான் நிலைமை என்பதை உணர்ந்துதான் ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். இதில் இன்னொரு கணக்கும் இருக்கிறது.
முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ்
சசிகலா ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். 2017ஆம் ஆண்டில் சசிகலா தண்டனை பெற்றார். எனவே அவர் 10 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. சசிகலா தேர்தலில் போட்டியிட விரும்பினால் 2020ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குள் அவருக்கு 72 வயது ஆகியிருக்கும். உடல்நல உபாதைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் சசிகலா அதை எல்லாம் யோசிக்காமல் இருக்க மாட்டார். அடுத்த சட்டசபை தேர்தல் 2026ம் ஆண்டு வரவுள்ளது. ஆனால் அந்த தேர்தல் முடிந்து ஒரு வருடம் கழித்துதான் சசிகலாவுக்கு கட்டுப்பாடு நீக்கப்படும். அதன்பிறகு இடைத்தேர்தலில் எங்காவது போட்டியிடலாம் அல்லது 2031ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தான் போட்டியிட முடியும். எனவே அதிமுக வின் முதல்வர் வேட்பாளராக சசிகலா அறிவிக்கப்பட வாய்ப்பே கிடையாது. ஒருவேளை 2020ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றாலும் ஓராண்டு கழித்து ஏதாவது ஒரு இடைத் தேர்தலில் போட்டியிட்டு அதன் பிறகுதான் அவர் முதல்வராக முடியும். அதுவரை முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்து பன்னீர்செல்வத்துக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஓபிஎஸ் ஆசை
இது குறித்த சிக்னல் பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் முதல்வராக வாய்ப்பு பன்னீர் செல்வத்திற்கு தேடி வந்திருப்பதாக கூறப்படுவது, அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சிக் உள்ளாகியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலிலேயே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் நினைத்தார். எடப்பாடி சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், சசிகலாவை அதிமுகவில் சேர்த்தால் தென்மாவட்டங்களில் அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. பன்னீர்செல்வம் முதல்வராகலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இதனால்தான் பன்னீர்செல்வம் இறங்கிய ஆடுவதற்கு முடிவு செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி பலம்
அதே நேரம் எடப்பாடி பழனிசாமி தலைமையை அவ்வளவு எளிதாக ஆட்டி பார்த்துவிட முடியாது. அவரிடம் பேசி சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்று சம்மதிக்க வைக்க முயற்சிகள் செய்யலாமே தவிர தடாலடியாக எதையும் செய்துவிட முடியாது. ஏனென்றால் இப்போது அதிமுக எம்எல்ஏக்களில் சுமார் 70 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்கள். கணிசமானோர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக அதிக வாக்குகளை பெறுவதற்கு சசிகலா தேவை என்று கொங்கு மாவட்டங்களில் உள்ள முக்கிய அதிமுக தலைவர்கள் சிலரும் உணர்ந்து இருக்கிறார்கள்.
எடப்பாடிக்கு நெருக்கடி
"கொங்கு மாவட்ட ஓட்டுக்களை மட்டும் நம்பிக் கொண்டே இருந்தால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. இங்குள்ள வாக்குகளையும் பாஜக பிரிக்கத் தொடங்கிவிட்டது. எனது நாம் பழைய படியே தமிழகம் முழுமைக்குமான கட்சியாக மாற வேண்டும்.." என்று அவர்கள் எடப்பாடி பழனிசாமியைம் வலியுறுத்த தொடங்கக் கூடும். அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்தால் கொங்கு மண்டலத்தில் ஒரு சில முக்கிய தலைவர்கள் சசிகலா, பன்னீர்செல்வம் பக்கம் செல்ல முயலக் கூடும் என்கிறார்கள். அதிமுக இப்படி எல்லாம் கணக்குப் போட்டாலும் கூட சசிகலா உள்ளே வந்து அதிமுக மிகப் பெரும் பலம் வாய்ந்த கட்சியாக மாறுவதற்கு டெல்லி அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.