பொதுக்குழுவே வேட்பாளரை தேர்வு செய்யனும்.. தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியுள்ளார்.. வைத்திலிங்கம்!
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியுள்ளதாக வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுக பொதுக்குழு தான் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்றும், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டதாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் கால அவகாசம் இல்லையென்றால், கடிதம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திடீரென இரும்பு பட்டறையில் புகுந்த ஆர்பி உதயகுமார்.. ஆச்சரியமான மக்கள்!
வேட்பாளர் தேர்வு படிவம்
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த முன்னாள் எம்எல்ஏ தென்னரசு அறிவிக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்கான படிவம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த படிவம் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இன்று காலை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் ஆலோசனை
இந்த நிலையில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான படிவத்தை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அனுப்பியது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நடுநிலை தவறிவிட்டார்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வைத்திலிங்கம் கூறுகையில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் செயற்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. வேறு வேட்பாளரை நிறுத்துவது குறித்து எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியுள்ளார். யாருக்கு வாக்க வேண்டும் என்று உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
நீதிக்கு புறம்பான செயல்
பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார், யார் வேட்பாளர் என தெரியவிக்க வேண்டிய கட்டாயமுள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரான செந்தில் முருகன் பெயரை குறிப்பிடாமல் இபிஎஸ் தரப்பு வேட்பாளரான தென்னரசு பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் முகவராக தமிழ்மகன் உசேன் செயல்பட்டுள்ளார். முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு யார் வேட்பாளர் என்று தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அவைத்தலைவருக்கு உள்ளது. இருவரை மட்டும் குறிப்பிட்டு ஏற்கிறீர்களா என்ற கேட்பது சரியில்லை. அதிமுக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பான செயலாகும் என்று தெரிவித்தார்.