மதுசூதனனை திடீரென இரவில் சந்தித்த ஓபிஎஸ்- அதிமுகவில் பரபரப்பு- ஜெயக்குமார் தந்த விளக்கம்
சென்னை: அவைத் தலைவர் மதுசூதனன் உடல் நலம் விசாரிக்கவே துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். ஆட்சி ஒருவருக்கு, கட்சி ஒருவருக்கு என்பதெல்லாம் கொள்கை முடிவு என்றும் அதுகுறித்து கட்சி முடிவு செய்யும் எனவும் ஜெயக்குமார் கூறினார்.
'தமிழர் தந்தை' சி.பா ஆதித்தனாரின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உருவப்படத்திற்கு தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், க.பாண்டியராஜன், பெஞ்சமின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், தமிழக பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், உலகம் முழுவது உள்ள தமிழர்களுக்காக பாடுபட்டவர், தமிழை உலகமெங்கும் பரப்ப அயராது உழைத்தவர் சி.பா ஆதித்தனார் என புகழாரம் சூட்டினார். மேலும், சி.பா ஆதித்தனார் எளிய நடையில் தமிழை அனைவரும் எளிதாக கற்றுணரும் வகையில் தனது பத்திரிக்கை மூலம் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர் எனவும் கூறினார்.
ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் ஓங்கிய இ.பி.எஸ். கை.. எதிர்பாராத திருப்பங்களால் பரபரக்கும் அதிமுக..!
விதிப்படி நடைபெறும்
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி ஒவ்வொரு கட்சியும் செயற்குழு, பொதுக்குழு கூட்டி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில்தான் முதற்கட்டமாக நாளை அ.தி.மு.க வின் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
கொள்கை முடிவு
உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருக்கும் அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களை நலம் விசாரிக்கவே துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை. ஆட்சி ஒருவருக்கு, கட்சி ஒருவருக்கு என்பதெல்லாம் கொள்கை முடிவு. அதுகுறித்து கட்சி முடிவு செய்யும் " என்றார்.
30 நிமிடம் சந்திப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் நேற் று முன்தினம் இரவு 9 மணிக்கு சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனை சந்தித்து திடீரென ஆலோசனை நடத்தினார். 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.. அதிமுக அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஒபிஎஸ் அவரை நேரில் சென்று சந்தித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பரவிய வதந்தி
மதுசூதனன் கடந்த மாதம் வீட்டில் தவறி விழுந்து தோள்பட்டை காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் வயது மூப்பு காரணமாக தீவிரமாக கட்சி பணியாற்ற முடியாத நிலையில் உள்ளார். இதனால் அவரது உடல் நலம் குறித்து விசாரிக்கவே ஓபிஎஸ் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் புதிய அவை தலைவர் குறித்து வதந்திகள் பரவ தொடங்கின. அவைத் தலைவராக பண்ருட்டி அல்லது பொன்னையனை நியமிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் பரவின. இதையடுத்தே ஒபிஎஸ நேரில் சென்று மதுசூதனனை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாகவும் வதந்திகள் பரவின. இந்நிலையில் தான் ஜெயக்குமார் ஒபிஎஸ் மதுசூதனன் சந்திப்பு குறித்து விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்,