அமாவாசைக்கு காத்திருந்த ஓபிஎஸ்.. முந்திய எடப்பாடி ‘போச்சே’ அதே இடத்தில் போட்டி கூட்டம்- பரபர பிளான்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போட்டி கூட்டம் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருந்ததை அறிந்து அவசர அவசரமாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கூட்டம் கட்சி விதிக்கு எதிரானது என அறிக்கை விடுத்தார். மேலும், உடனடியாக இன்று சென்னைக்கு கிளம்பியுள்ளார்.
கருணாநிதி ஸ்டைலில் சசி! எம்ஜிஆர் திட்டத்தை கையில் எடுத்த ஓபிஎஸ்! வெலவெலத்த எடப்பாடி! ஓ இதான் மேட்டரா
ஒற்றைத் தலைமை
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகளுக்கு இடையே கடுமையான மோதல் போக்கை உருவாக்கியுள்ளது. சென்னையில் கடந்த 14-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பகிரங்கமாக வெடித்தது. பல்வேறு குழப்பங்களுக்கு இடையே 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம், இந்தப் பிரச்சனைக்கு மேலும் தூபம் போட்டது. இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வலியுறுத்தி வரும் நிலையில் ஒற்றைத் தலைமை கட்டாயம் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பிடிவாதமாக இருந்து வருகின்றனர்.
பொதுக்குழு பூகம்பம்
பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி வருகிறது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் கட்சியின் அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளும் ரத்தாகி விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகின்றனர்.
மீண்டும்
ஜூலை 11-ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவித்த நிலையில், பொதுக்குழுவை நடத்த முடியாது என ஓபிஎஸ் தரப்பினர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். அதேநேரத்தில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமை தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என ஈபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.
ஆதரவு திரட்ட
இதற்கிடையே, பாஜக மேலிட ஆதரவு வேண்டி டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன் தினம் சென்னை திரும்பினார். நேற்று ஓபிஎஸ் மதுரை வழியாக தனது சொந்த ஊரான பெரியகுளம் சென்றார். ஓபிஎஸ் செல்லும் வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்கள் தொடங்கி தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனக்கு ஆதரவு திரட்ட திட்டமிட்டு வருகிறார்.
சென்னையில் மீட்டிங்
இதற்கிடையே ஜூலை 28 ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த திட்டமிட்டார். அங்கு வைத்து ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணம் தொடர்பாகவும், கட்சியின் தலைமைப் பதவி தொடர்பாகவும், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. நாளை அமாவாசை தினம் என்பதால் அன்று வைத்து அறிவித்தால் தனக்கு சாதகமான நிலை ஏற்படும் என ஓபிஎஸ் திட்டமிட்டிருந்தார்.
தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்
இதற்கிடையே, நேற்று இரவு திடீரென எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவித்து, இன்று கூட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜெயக்குமாரை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை கிளம்பிய ஓபிஎஸ்
தான் நாளை (ஜூலை 28) அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருந்ததை அறிந்து அவசர அவசரமாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டியுள்ளதை அறிந்து ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, இன்றே பெரியகுளத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பியுள்ளார். ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.
போட்டி கூட்டம்
திட்டமிட்டபடி நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டத்தை ஓபிஎஸ் நடத்துவார் என்று கூறப்படுகிறது. அதேநேரம் இந்த ஆலோசனைக் கூட்டத்தை, எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு எதிரான போட்டி தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டமாக நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் ஓபிஎஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், நாளை நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கி அறிவிப்பார் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன.