கவனிச்சீங்களா.. "தனிப்பட்ட காரணங்களுக்காக" முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாரே ஓபிஎஸ்.. இதே நாள்தான்!
சென்னை: "தனிப்பட்ட காரணங்களுக்காக" முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.. என்று ஆளுநரிடம் தனது முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கி இன்றுடன் நான்கு வருடங்கள் ஆகின்றது.
எத்தனையோ காரணங்களை சொல்லி, பல மாநிலங்களிலும் பல முதல்வர்கள் ராஜினாமா செய்துள்ளதை பார்த்துள்ளோம். ஆனால் தனிப்பட்ட காரணம் என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி இந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அவர் சமர்ப்பித்திருந்தார்.
அழுதபடி பதவியேற்றனர்
2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக புதிய அமைச்சரவை பதவியேற்றது. அழுது கண்ணீர் வடித்தபடி ஒவ்வொரு அமைச்சர்களும் பதவி ஏற்ற வீடியோ வெளியாகியதை உங்களில் பலர் இப்போதும் மறந்திருக்க முடியாது.
முதல்வராக ஆசைப்பட்ட சசிகலா
அப்போதுதான் சட்டைப் பையில் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக்கொண்டு அழுதபடியே முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் காலங்கள் மாறின, காட்சிகள் மாறின. முதல்வர் பதவிக்கு வர வேண்டுமென்று நினைத்தார் சசிகலா. இதையடுத்து பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பன்னீர் செல்வத்திற்கு நல்ல பெயர்
அப்போதைய காலகட்டத்தில், வர்தா புயல் நிவாரணம், ஜல்லிக்கட்டு விவகாரத்துக்கு நல்ல தீர்வு, உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் பன்னீர்செல்வத்துக்கு மிகுந்த நற்பெயர் இருந்தது. இந்த நிலையில் முதல்வர் பதவியை துறக்க செய்ததால் மிகவும் சோகமாக காணப்பட்டார் பன்னீர்செல்வம். இருப்பினும் கட்சி முழுக்க சசிகலா கட்டுப்பாட்டில் இருந்ததால் பன்னீர்செல்வத்துக்கு வேறு வழி தெரியவில்லை. இதையடுத்து, 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்.
4 வருடங்கள் சிறை
இதையடுத்து மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதி அமைந்துள்ள இடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார் பன்னீர்செல்வம். பிப்ரவரி 8ஆம் தேதி பன்னீர்செல்வம் தியானம் செய்தார். தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கூறினர் என்று ஓபிஎஸ் கூறினார். பிப்ரவரி 8ம் தேதி பன்னீர்செல்வம் தியானம் செய்த நிலையிலும் சசிகலா பதவியேற்பு ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் பிப்ரவரி 14ம் தேதி 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்றார் சசிகலா.
ஆரம்ப புள்ளி
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். எனவே சசிகலா கோரிக்கைப்படி அதிமுக எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். இதன்பிறகு எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கும் இணக்கம் ஏற்பட்டதையடுத்து இரு அணிகளும் இணைந்தன. ஓ.பன்னீர் செல்வம் தற்போது துணை முதல்வராக இருக்கிறார். இத்தனை களேபரங்களுக்கு அச்சாணியாக மாறிய நாள்தான் இன்று.