சசிகலா குடும்பத்துடன் ராசியோ? அதிமுகவில் சேர்ப்பது குறித்து கனத்த மவுனம் காக்கும் ஓபிஎஸ்!
சென்னை: சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்போவதில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வருகிறார். ஆனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இது குறித்து மவுனமாகவே இருந்து வருவது பல கேள்விகளை எழுப்புகிறது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகால சிறை தண்டனையை அனுபவித்து நிறைவு செய்ய இருக்கிறார். வரும் 27-ந் தேதி சசிகலா பெங்களுரு சிறையில் இருந்து விடுதலையாக இருக்கிறார்.
சசிகலா அதிமுக
சசிகலாவை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலை பாதிப்பு அவர்களை அப்செட் ஆக்கியுள்ளது. இன்னொரு பக்கம் சசிகலா மீண்டும் வரும் போது அதிமுகவில் ஏற்பட இருக்கும் புயல்கள் பெரும் விவாதங்களுக்குரியதாகி வருகிறது.
எடப்பாடி அணி போர்க்கொடி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கப் போவதே இல்லை என திட்டவட்டமாக கூறுகின்றனர். ஆனால் அதிமுகவை கூட்டணிக்குள் வைத்திருக்கும் பாஜகவோ, சசிகலாவையும் அதிமுகவில் சேர்த்து தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறது. சசிகலா மீண்டும் அதிமுகவில் தலையெடுத்தால் தங்களது எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்பதால் இப்போது பதவியில் இருப்பவர்கள் எதிர்ப்பு காட்டுகின்றனர்.
மவுனமாக ஓபிஎஸ்
ஆனால் தமது முதல்வர் பதவியை பறித்த சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்னமும் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் அதிமுகவில் நடப்பது அண்ணன் தம்பி பிரச்சனை.. இதனை நாங்கள் பேசித் தீர்ப்போம் என பட்டும்படாமல் ஓபிஎஸ் கூறியதை சசிகலா ஆதரவாளர்கள் குதூகலத்துடன் கொண்டாடுகின்றனர்.
அமமுக கேள்வி
தினகரனின் அமமுகவிலோ, சசிகலாவை சேர்க்கமாட்டோம் என ஈபிஎஸ் சொல்கிறார். ஆனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் என்ன சொல்கிறார்? என்பதுதான் முக்கியம் என கேலி சித்திரம் மூலம் சுட்டிக்காட்டி இருக்கிறது. என்னதான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளரைப் போல ஓபிஎஸ்-க்கு தனி பில்டப் கொடுக்கும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
நம்பிக்கையுடன் இருக்கிறாரோ ஓபிஎஸ்?
அதேபோல் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என பாஜக இன்னமும் ஏற்கவில்லை. பாஜகவின் நம்பிக்கைக்குரிய முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ்தான்.. காலம் மாறும் காட்சிகள் மாறும் என்கிற கணக்கில்தான் ஓபிஎஸ் இத்தகைய விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார் என்கின்றனர் சில மூத்த பத்திரிகையாளர்கள். என்னதான் சசிகலாவுடன் முட்டி மோதியிருந்தாலும் அண்மைக்காலமாக அவரது குடும்பத்தினருடன் ராசியாகும் நடவடிக்கைகளை ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்டிருப்பதாகவும் இதில் கிடைத்த சிக்னல்கள்தான் ஓபிஎஸ்-ன் கனத்த மவுனத்தின் பின்னணி என்றும் அமமுக வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.