எடப்பாடியுடன் மோதலை ஆரம்பிக்கும் ஓபிஎஸ்..! சசிகலாவுக்காக தனி ட்ராக்! ஆரம்பமானது அதிமுக குஸ்தி!
சென்னை: சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியிருப்பது கிட்டத்தட்ட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சண்டை செய்வதற்கு சமம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் சசிகலா இணைப்பு? தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு.. ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
சசிகலா விருப்பம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டங்களை ஒட்டி ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். அப்போது அதிமுகவில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், யாரும் யாரையும் எதிரியாக பார்க்க கூடாது, அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று சசிகலா பேசியிருந்தார். அப்போது சென்னையில் எம்ஜிஆர் நினைவு இல்லத்தின் முன்பு அதிமுக கொடியை சசிகலா ஏற்றி வைத்தார். அந்த கொடிக்கான கல்வெட்டில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
எடப்பாடி பழனிசாமி டென்சன்
கடந்த வாரம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஆளுநர் மாளிகை முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறிக் கொள்கிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தாங்கள் தான் அதிமுக என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது, உச்சநீதிமன்றமும் தெரிவித்துவிட்டது, அப்படி இருக்கையில் மற்றவர்கள் தங்களை அதிமுக என்று கூறிக் கொள்வதை சூரியனை பார்த்து ஏதோ என்பதோடு நிறுத்திக் கொண்டார். அதாவது சூரியனை பார்த்து நாய் குரைப்பது போல என கூற வந்தவர் பாதியில் தனது வார்த்தையை நிறுத்தி நாகரீகமாக முடித்துக் கொண்டார்.
ஜெயக்குமார் பிடிவாதம்
இதே போல் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம் சசிகலாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதிமுகவில் அவர் மறுபடியும் சேர்க்கப்பட வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார். மேலும் மன்னார்குடி மாஃபியா என்கிற வார்த்தையையும் ஜெயக்குமார் தவறாமல் உபயோகித்து வருகிறார். இதனால் எப்படி மறுபடியும் சசிகலாவால் அதிமுகவில் இணைய முடியும் என்று கேள்விகள் எழ ஆரம்பித்தன. சசிகலா சுற்றுப்பயணம் தொடர்பாக எதிர்பார்ப்பும் எழுந்தது.
Recommended Video
ஓபிஎஸ் தடாலடி
இப்படி சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக இருக்கும் நிலையில், ஓபிஎஸ் கொடுத்துள்ள பேட்டி, அதிமுகவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சிடம், சசிகலா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு யார் வேண்டுமனாலும் அரசியலுக்கு வரலாம், அவர்களை ஏற்பதும், ஏற்காததும் மக்கள் கைகளில் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் சசிகலா மறுபடியும் அதிமுகவில் சேர்த்துக கொள்ளப்படுவாரா என்றும் செய்தியாளர்கள் கேட்க, அதனை தலைமைகழக நிர்வாகிகள் கூடி ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று ஒரே போடாக போட்டார் ஓபிஎஸ். அத்தோடு சசிகலாவை நாயோடு ஒப்பிட்டு எடப்பாடி பேசியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதிமுகவில் யாராக இருந்தாலும் நாகரீகமாக பேச வேண்டும் என்று எச்சரிக்கும் தொனியில் பதில்அளித்தார் ஓபிஎஸ்.
ஆரம்பமானது சண்டை
சசிகலாவை எடப்பாடி பழனிசாமியை விட மோசமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர். ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமியையே எச்சரிக்கும் வகையில் ஓபிஎஸ் பேசியிருப்பது ஏன் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. அத்துடன் சசிகலாவிற்கு அதிமுகவில் கதவுகள் சாத்தப்பட்டுவிட்டதாகவே எடப்பாடி பழனிசாமி முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கூடி ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று ஓபிஎஸ் கூறியிருப்பது நேரடியாகவே எடப்பாடி பழனிசாமியுடன் சண்டை செய்வதற்கு சமம் என்று நாம் கூறித் தெரியவேண்டியதில்லை.