சாமிதாங்க கும்பிட்டேன்.. யாகமெல்லாம் நடத்தலை... ஓ.பன்னீர் செல்வம் அதிரடி விளக்கம்
யாகம் நடத்தியது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: "நான் சாமிதான் கும்பிட்டேன். யாகமெல்லாம் செய்யவில்லை"என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறையில் நேற்று அதிகாலை யாகம் நடத்தப்பட்டதாக தகவல்கள் பரவின.
இந்த யாகத்தை செய்ய நேற்று முன்தினமே அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. துணை முதல்வரின் அறை புதுப்பிக்கப்பட்டுள்ளதால் தான் யாகம் நடத்தப்பட்டது என்று ஒரு பக்கம் காரணம் கூறப்பட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினோ, இந்த யாகம் எதற்கு? முதல்வர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் அமர்வதற்காகவா? என்று கேள்வி கேட்டிருந்தார்.
இந்நிலையில், "நான் சாமிதான் கும்பிட்டேன். யாகமெல்லாம் செய்யவில்லை" என்று ஓபிஎஸ் யாகம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது: "தலைமை செயலகத்தில் என்னுடைய அறையில் நான் சாமி கும்பிட்டேன். அவ்வளவுதான். வழக்கம்போலத்தான் சாமி கும்பிட்டேன். யாகமெல்லாம் நடத்தவில்லை. என்னுடைய அலுவலக அறையின் ஜன்னல் கதவு அரித்திருந்தது. இதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றன.
பொதுவாக இப்படி செப்பனிடும் பணிகள் நடைபெற்றால், அதற்கு என்ன பூஜைகள் செய்யப்படுமோஅதைதான் நான் செய்தேன். முதல்வராக வேண்டும் என்றுதான் யாகம் நடத்தினேன் என்று ஸ்டாலின் சொல்லுகிறார். அப்படியென்றால் நான் மட்டும்தானா யாகம் நடத்துவேன்? எல்லோரும்தான் யாகம் நடத்துவார்களே? யாகம் நடத்தினால், முதல்வராகிவிடலாம் என்று ஸ்டாலின் நம்புகிறாரா?" என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.