அதிமுக குழப்பங்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டரில் அதிரடி பதில்.. ஏற்கப்பட்டதா கோரிக்கை?
சென்னை: அதிமுகவில் என்ன நடக்கிறது என்ற பல்வேறு யூகங்களுக்கு தனது டுவிட்டர் பதிவின் மூலம் அதிரடியாக பதில் அளித்து உள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தங்கள் தலைவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று பொருள்படும் வகையில் போஸ்டர்கள் ஒட்டி வந்ததால் இந்த சர்ச்சை இன்னும் அதிகரித்தது.
ஓபிஎஸ்- நாளைய முதல்வரே என 100 அடி பேனரை தாங்கி பிடித்து வரவேற்ற ஆதரவாளர்கள்- சென்னை திரும்ப மறுப்பு!
செயற்குழு கூட்டம்
இந்த விவகாரங்கள் பற்றி விவாதிப்பதற்காக செப்டம்பர் 28ஆம் தேதி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தின் போது பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் தங்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறியதாகவும், செயற்குழு கூட்டத்தின் போது காரசாரமாக வாத விவாதங்கள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு குறைவு
பன்னீர்செல்வத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த அதிமுகவில் உள்ள பல நிர்வாகிகளும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 7ம் தேதி அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பண்ணை வீட்டில் ஓபிஎஸ்
இந்த நிலையில்தான் அடுத்தடுத்த நாட்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. தேனி மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு அவர் சென்றுவிட்டார். பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் குழப்பத்தை உருவாக்கின. பன்னீர்செல்வம் பழையபடி தர்ம யுத்தம் என்ற பெயரில் கிளர்ச்சியில் ஈடுபடுவாரோ, அல்லது வேறு கட்சிக்கு செல்வாரா என்றெல்லாம் யூகங்கள் றெக்கை கட்டிப் பறந்தன.
ஓபிஎஸ் டுவிட்டர் பதிவு
இந்த நிலையில்தான் இன்று காலை பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். இத்தனை நாட்களாக நிலவிய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல அந்த ட்விட்டர் தகவல் உள்ளது. ட்விட்டர் பதிவில் பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது: தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! இவ்வாறு ஓபிஎஸ் கூறியுள்ளார்.
அதிமுக நலன்
தமிழக மக்கள் மற்றும் அதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன, இனியும் அவ்வாறே இருக்கும் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளதன் மூலம், அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் வெளியேறப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதிமுகவுக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும் என்பது பன்னீர்செல்வத்தின் கோரிக்கை. அந்தக் குழு தான் சட்டசபை தேர்தலில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டும் என்பதும் அவர் கோரிக்கை.
முதல்வர் வேட்பாளர் முடிவு
இந்த குழுவில், 60% எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களுக்கும் 40% தனது ஆதரவாளர்களும் இடம் பெறலாம் என்பது பன்னீர்செல்வத்தின் பரிந்துரை. இந்த பரிந்துரையை எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்காமல் இருந்தது. தற்போது இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளதாகவும் எனவே முதல்வர் பதவிக்கான வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி, கட்சி ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும் இருப்பார்கள் என்றும், இதற்கு பன்னீர்செல்வம் சம்மதித்து விட்டதால்தான் இப்படி ஒரு சமாதான ட்வீட் வெளியிடப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ அதிமுகவில் நடைபெற்றுவந்த குழப்பங்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.