"நானா.. எதிர்த்தேனா.. வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு சொல்லவே இல்லை".. ஓபிஎஸ் வேதனை
ஓ பன்னீர்செல்வம் வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "வன்னியர் இடஒதுக்கீட்டில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை... வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. சில விஷமிகள் தவறான கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருவது வேதனை அளிக்கிறது" என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது... இதைதான் தங்கள் முதல் கோரிக்கையாக பாமக ஆரம்பத்தில் இருந்தே கேட்டு வருகிறது.
அதாவது 1987 முதலே, எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கோரிக்கையை அவர்கள் முன்வைக்க, அதனை எம்ஜிஆரும் ஏற்று கொண்டதாக தெரியவில்லை. எனினும் பாமகவின் கோரிக்கை தொடர்கிறது.
பாமக
இப்போது கொரோனா தொற்று இன்னும் குறையாததையும் பொருட்படுத்தாமல், தேர்தல் நெருங்கும் சமயத்தில், மறுபடியும் இந்த கோரிக்கையை பாமக வலியுறுத்தி சென்னையில் போராட்டமும் செய்தது.. அந்த போராட்டம் பாமகவுக்கே மைனஸாகிவிட்டது.. பொதுமக்கள் பாதிப்பு., ரயில் மீது கல்வீசி தாக்குதல் என கெட்ட பெயர்களை பாமக ஒரே நாளில் எடுத்து கொண்டது.
அதிமுக
இந்த சூழலில் அதிமுக கூட்டம் ஒன்று நடந்தது.. அப்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டாம் என்றும், இவர்களுக்கு கொடுத்தால் மற்றவர்களும் வந்து நிற்பார்கள்.. பாமகவுக்கு மட்டும் இடஒதுக்கீடு தந்துவிட்டாலும், மற்ற சமுதாய மக்களின் ஓட்டுகள் வராது என்று ஓபிஎஸ் அந்த கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியானது.. இது உண்மையா என்றும் தெரியவில்லை.. எனினும், இந்த பேச்சு குறித்து சோஷியல் மீடியாவில் ஓபிஎஸ்ஸுக்கு எதிரான கருத்துக்களும் பரவின.
வன்னியர்கள்
இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ட்வீட்
எனினும், இந்த ட்வீட்டுக்கு ட்விட்டர்வாசிகள் பலரும் திரண்டு வந்து கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர்.. அதில், நேரடியாக சிலர் கோரிக்கை விடுத்து, ஐயா எங்களுக்கு இடஒதுக்கீடுக்கு வழிவகை செய்யுங்கள் என்று கோரிக்கைகளை விடாமல் விடுத்து வருகின்றனர்.