மெகா ட்விஸ்ட்.. போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் டீம்.. மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு?
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணி சமாதானத்திற்குத் தயாரான நிலையில், மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சென்னை : அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி செயல்படவில்லை. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார் யார் வேட்பாளராக இருக்கின்றனர் என தெரிவிக்காமல், ஈபிஎஸ் அணி வேட்பாளர் தென்னரசு பெயரை மட்டும் படிவத்தில் குறிப்பிட்டுள்ளது சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான செயல் எனக் கூறி ஈபிஎஸ் அணியினர் தயாரித்து அனுப்பிய படிவத்தைப் புறக்கணித்துள்ளது ஓபிஎஸ் அணி. இதன் மூலம், மீண்டும் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாட ஓபிஎஸ் அணி தயாராகிவிட்டது உறுதியாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் இது தொடர்பான ஆவணங்களை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை முன்மொழிந்துள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் அளிக்கும்படியும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவுறுத்தியுள்ளார்.
அந்த படிவம் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த படிவங்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இருப்பதாகக் கூறி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது ஓபிஎஸ் அணி.
ஈரோடு கிழக்கில் 1000 ஓட்டு கூட வாங்க முடியாத ஓபிஎஸ்.. வாக்கு வங்கி இல்லாத பாஜக.. பொங்கலூர் மணிகண்டன்
பொதுக்குழு மூலம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் சூழலில் இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை, பொதுக்குழுவே இறுதி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இடைத் தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் வாயிலாக மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, இடைத்தேர்தலை ஒற்றுமையாகச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவளிப்போம் என ஓபிஎஸ் அறிவித்தார்.
ஒப்புதல் படிவங்கள்
அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் சுமார் 2,675 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வேட்பாளர் ஒப்புதல் படிவம் அனுப்பி வைக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவிட்டது. இந்த படிவங்கள் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மூலம் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணிக்கும் படிவங்கள்
ஈபிஎஸ் தரப்பு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டதைப் போலவே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் இந்த படிவங்களை அனுப்பியுள்ளார் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன். அதில் இன்று மாலை 7 மணிக்குள் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ள வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறேன் (அ) மறுக்கிறேன் என்ற விபரத்தை தெரிவிக்கவேண்டும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
அவசர ஆலோசனை
அதிமுக வேட்பாளராக தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ளதாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கடிதம் அனுப்பியுள்ளார். இதில் அவரை ஆதரிக்காதவர்கள் மாற்று வேட்பாளர் பெயரையும் பட்டியலில் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஓபிஎஸ் அணி முடிவு
இந்த ஆலோசனையில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பிய படிவத்தைச் சமர்ப்பிக்காமல் புறக்கணிப்பது என்ற முடிவை எடுத்துள்ளது ஓபிஎஸ் அணி. ஈபிஎஸ் அணி அறிவித்த வேட்பாளரான தென்னரசு பெயர் மட்டும் அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமான வகையில் ஈபிஎஸ் செயல்பட்டுள்ளதாக மீண்டும் நீதிமன்ற படியை நாட ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளது.
சட்டவிரோதம்
பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார் யார் வேட்பாளராக இருக்கின்றனர் என தெரிவிக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே அதிமுக சார்பில் செந்தில் முருகன் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவர் பெயரை குறிப்பிடவில்லை. செந்தில் முருகன் பெயரை குறிப்பிடாமல், இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத தென்னரசு பெயர் மட்டுமே படிவத்தில் உள்ளது. நடுநிலை தவறி ஒரு சிலரின் கைப்பாவையாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் செயல்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான செயல் என ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முரண்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், வேட்பாளர் தேர்வு தொடர்பாக தமிழ்மகன் உசேன் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. எந்த நோக்கத்திற்காக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதோ அதை அவைத்தலைவர் நிராகரித்துள்ளார். அவரது செயல் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளது. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அவர்கள் அறிவித்த வேட்பாளர் தென்னரசு பெயரை மட்டும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று கூறியிருப்பது சரியல்ல. வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும்.
தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு
அப்படியிருக்கையில், முன்கூட்டியே ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார்கள் என்றால், அவர்கள் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு கருத்து கேட்டிருக்கிறார்கள். இது வேட்பாளர் தேர்வு கிடையாது, பொது வாக்கெடுப்பு முறை. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளார். தேர்தல் முறை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறவேண்டும் எனத் தெரிவித்தார். அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், சட்டவிரோத செயலுக்கு எங்களின் ஆதரவு இருக்காது என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.