ஆஹா.. காலையிலேயே ஜெ. நினைவிடத்துக்கு விரைந்த ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத்!
Recommended Video
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகனும், தேனி லோக்சபா தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும், இன்று காலை மரியாதை செய்தனர்.
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி. ரவீந்திரநாத் மட்டுமே. மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
எனவே, ரவீந்திரநாத் வெற்றி, அதிமுகவால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ரவீந்திரநாத் இன்று அஞ்சலி செலுத்தினார்.
தேனி வெற்றி
காலை 9.30 மணியளவில், ஓபிஎஸ், ரவீந்திரநாத், அமைச்சர் உதயகுமார், எம்எல்ஏ ஜக்கையன், தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தேனி தொகுதியில் பெற்ற வெற்றியை, ஜெயலலிதாவிற்கு சமர்ப்பிக்கும் வகையில் இந்த விசிட் இருந்ததாக கூறப்படுகிறது.
எம்ஜிஆர், அண்ணா
ஜெயலலிதா நினைவிடத்தில்,முழங்கால் போட்டு மண்டியிட்டு, ரவீந்திரநாத் அஞ்சலி செலுத்தியதை பார்க்க முடிந்தது. இதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் மற்றும், அறிஞர் அண்ணா நினைவிடங்களுக்கும், இவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அமைச்சர் பதவி
மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, ரவீந்திர நாத்துக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், அமைச்சரவையில் ரவீந்திரநாத்துக்கு இடம் கிடைக்கவில்லை. அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணம் என செய்திகள் வெளியாகின.
தர்மயுத்தம்
ஆனால், கட்சிக்குள் நடக்கும் விஷயங்களை பற்றி யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாவதாக கூறி, அறிக்கை வெளியிட்டு ரவீந்திரநாத் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரவீந்திரநாத், மற்றும் பன்னீர் செல்வம் இன்று, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, முதல்வர் பதவியை சசிகலா பறித்தபோது, ஜெ. சமாதியில், தியானம் செய்து தர்மயுத்தம் என்ற பெயரில், ஜெ. மரணத்திற்கு நியாயம் கேட்பதாக அதிரடியாக அறிவித்தவர் ஓபிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.