ஓரிரு நாளில் சந்தோஷமான முடிவு வெளியாகும்.. அப்புறம் தலைவர்களுடன் மாநாடு.. சென்னையில் ஓபிஎஸ் உற்சாகம்
சென்னை: ஓரிரு நாட்களில் அதிமுக கூட்டணி இறுதியாகும், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னை வியாசர்பாடியில் இன்று இரவு அதிமுக சார்பில்நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த தின பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓ.பன்னீர் செல்வம், பின்னர் இரவு 9 மணியளவில் நிருபர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:
இன்னும் ஓரிரு நாட்களில், கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடையும். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். அதன்பிறகு, அனைத்து கட்சி தலைவர்களையும் இணைத்து மாநாடு நடத்துவோம். தேசிய கட்சிகள் மற்றும், மாநில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இடம் பெறும்.
பாஜக, பாமக தவிர மேலும் பல மாநில கட்சிகளுடனும் பேசியுள்ளோம் என்றார். தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில், இழுபறி நிலை நீடிக்கிறதா என்ற நிருபர்கள் கேள்விக்கு, கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. நீங்கள் எதிர்பார்க்கும் சந்தோஷமான முடிவு விரைவில் வெளியாகும், என்றார்.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, சில கட்சிகள், சில கோரிக்கைகள் வைப்பது தேர்தல் கால வழக்கம்தான். முக்கியத்துவ கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்.
பாமகவின் கோரிக்கையை பரிசீலித்து, ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுவிக்க ஆளுநரிடம் வலியுறுத்துவோம் என்றார்.
கடந்த லோக்சபா தேர்தலில் நாட்டின் 3வது பெரிய கட்சியாக அதிமுக வெற்றி பெற்றது. இப்போது அதைவிட அதிக பலத்தோடு நாங்கள் உள்ளோம். இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், எப்படியாவது ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் முயற்சி செய்கிறார். தனக்கு கீழ்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்பதே அவர் திட்டம். ஆனால், அதிமுக தொண்டர்கள் நமது பக்கம் உள்ளனர். குண்டர்கள்தான் தினகரன் பக்கம் உள்ளனர், என்று விளாசினார் ஓ.பன்னீர் செல்வம்.