மருத்துவ படிப்பில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு- சுப்ரீம் கோர்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேவியட் மனு
சென்னை: அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது பற்றிய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேறு யாரும் தடையாணை பெறாமல் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதமான இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்திலும், அடுத்து உயர்நீதிமன்றத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வழக்கு பதிவு செய்திருந்தோம். திமுக உள்ளிட்ட கட்சிகளும், தமிழக அரசின் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சென்னை, உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் 27.07.2020 அன்று தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு, மருத்துவ கவுன்சிலின் செயலாளர், பல்மருத்துவ கல்வி இயக்குநர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஆகிய மூவரைக் கொண்ட குழு அமைத்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டது.
சனிக்கிழமையே கூட்டம் கூடுதே...ஞாயிறு லாக்டவுனை ரத்து பண்ணுங்க - ஹைகோர்ட்டில் வழக்கு
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேறு யாரும் தடையாணை பெறாமல் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சுரேந்திர நாத் அவர்கள் தாக்கல் செய்துள்ளார்.