ஓபிசி இடஒதுக்கீடு.. மாணவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.. டிடிவி தினகரன் டிவிட்
சென்னை: ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை ஹைகோர்ட் உத்தரவை பின்பற்றி மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் டிவிட் செய்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
அதேபோல் 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற குழு அமைக்க வேண்டும். இதற்காக உடனே மூன்று நபர் கமிட்டி அமைத்து முடிவு எடுக்க வேண்டும், என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
ஓபிசி இட ஒதுக்கீடு.. தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.. ம.நீ.ம கமல்ஹாசன் வேண்டுகோள்!
இது தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் டிவிட் செய்துள்ளார். அதில், மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) இட ஒதுக்கீடு அவசியமானது என்பதால், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்து 3 மாதங்களுக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
இதனைப் பின்பற்றி மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்புக்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இங்கே பின்பற்றப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறைக்கு ஏற்ப இடங்கள் ஒதுக்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்யவேண்டும்.
சமூக நீதி காத்த வீராங்கனை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கி, பாதுகாத்து தந்த இந்த இட ஒதுக்கீட்டு முறையின்படி 50% இடங்களை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கிடுவதில் தமிழக அரசு எந்தவித சமரசமும் செய்துகொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.