பாரத ஸ்டேட் வங்கி தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு சலுகை.. நீதி விசாரணை நடத்த கோரிக்கை
சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பணிக்கான தேர்வில் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவரை விட, முன்னேறிய வகுப்பினருக்கு கட் ஆப் மதிப்பெண் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது குறித்து நீதி விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
பட்டியல் இனத்தவரை விட உயர் வகுப்பினருக்கு தகுதி காண் மதிப்பெண் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது, சமூக நீதிக்கு எதிரானது என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்
உயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி என்பதற்கு வங்கி தேர்வு முடிவே சாட்சி என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஸ்டேட் வங்கி தேர்வில் பெரும்பாலும் முன்னேறிய வகுப்பினரே தேர்ச்சி பெறும் நிலை உருவாகியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
உயர்வகுப்பினர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தாலும் கூட, கல்வியிலும் சமூக ரீதியிலும் அவர்கள் பல தலைமுறைகளாக படித்த குடும்பங்களாக தான் இருப்பார்கள். அவர்களுக்கு கட் ஆப் 28 மதிப்பெண் என்றும் முதல் தலைமுறையாக படித்து வரக்கூடிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு 61 மதிப்பெண் கட் ஆப் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை என, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இடஒதுக்கீடு கொள்கையில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக மத்திய அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய பாரபட்ச போக்கை களைந்திட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
ஸ்டேட் வங்கி தேர்வில் நிகழ்த்திய கொடூரத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியின் பணியாளர் தேர்வில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு மிக குறைந்த அளவில் கட்ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, சமூக நீதியின் அடித்தளத்தையே சிதைக்கும் இந்த தவறான செயல் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து வங்கி நிர்வாகமும், மத்திய அரசும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.