ஏன் துரைமுருகன் வீட்டில் மட்டும்?.. சீமான் சொன்னது சரிதான்.. பாரபட்சத்தை விலக்குமா தேர்தல் ஆணையம்
போட்டியிடும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பாரபட்சமற்ற முறையில் ரெய்டுகள் நடத்தப்பட வேண்டும்
Recommended Video
சென்னை: அது என்ன துரைமுருகன் வீட்டில மட்டும் ரெய்டு நடக்குது? என்ன காரணம்? அதுவும் எலக்ஷன் நேரத்துல? என்ற கேள்விகள் எழுகின்றன.
ரெய்டு நடத்தறது தப்பில்லைதான்.. ஆனால் அது பாரபட்சமற்ற முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு!
ஏற்கனவே சிட்டிங் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடந்து, அதில் ஏராளமான தகவல்கள், ஆவணங்கள் கிடைத்ததாக சொல்லப்பட்டது. இது சொல்லி ஒரு வருஷம் ஆகிறது.. ஆனால் அதில் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாததையும் மக்கள் கவனித்து கொண்டுதான் வருகிறார்கள்.
துரைமுருகன் வீட்டிலும் சோதனை நடத்திய போது கதிர் ஆனந்தின் பள்ளி, கல்லூரியிலும் ரெய்டு!
முரண்பாடு
இந்நிலையில், துரைமுருகன் வீட்டுக்கு வந்த அதிகாரிகள் "வருமானவரித் துறை என்றும், தேர்தல் பார்வையாளர்கள் என்றும் எதற்காக முரண்பட்டு பேச வேண்டும்? அப்படின்னா உண்மையிலேயே ரெய்டு நடத்தியவர்கள் யார்? யார் உத்தரவின் பேரில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது? என்பது வெளிப்படையாக தெரியவில்லை.
கல்வி நிறுவனம்
அப்படியே ரெய்டு நடத்தப்பட்டாலும், அதே தொகுதியில் போட்டியிடும் முக்கியமான வேட்பாளர் வீட்டில் ஏன் ரெய்டு நடத்தப்படவில்லை. இத்தனைக்கும் அவர் ஒரு தொழிலதிபர்.. கல்வி நிறுவனங்களை சொந்தமாக வைத்து நடத்தி வருபவர். அங்கேதானே முதலில் ரெய்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும்?
கோடீஸ்வரர்கள்
வேலூர் தொகுதி என்று மட்டுமில்லை.. இந்த முறை தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலானோர் தொழிலதிபர்கள்.. கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர்கள்.. செல்வம் கொழிக்கும் பெரும் பெரும் கோடீஸ்வரர்கள். அந்த பண பலத்தைப் பார்த்துத்தான் இவர்களுக்கு கட்சிகள் சீட் கொடுத்துள்ளன.
அரசியல் நோக்கம்
அதனால் எல்லா தரப்பிலும், எல்லா கட்சி சார்பிலும் உள்ள "பசையுள்ள பார்ட்டி"களிடம் ரெய்டு நடத்த வேண்டியது அவசியமாகிறது. அதை விட்டுவிட்டு, இத்தனை காலம் இல்லாமல் திடீரென்று துரைமுருகன் வீட்டுக்கு மட்டும் ரெய்டு நடத்துவது என்பது அரசியல் பழிவாங்கும் நோக்கமாக உள்ளது.
சாமான்ய மக்கள்
உண்மையில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் வீடுகள், அலுவலகங்களில்தான் ரெய்டுகளை முடுக்கி விட வேண்டும். ஆனால் சாமானிய மக்களிடம்தான் அதிக கெடுபிடிகள் காட்டப்படுகின்றன. துரைமுருகன் வீட்டில் நடத்தியது போல அத்தனை கட்சி பெரும் பணக்கார வேட்பாளர்களின் இருப்பிடங்களில் ரெய்டுகள் நடந்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்.
மைனஸ் பாயின்ட்
அது மட்டுமில்லை.. இந்த நேரத்தில் ரெய்டு நடத்த அனுமதித்திருப்பது ஆளும் தரப்புக்குதான் மைனஸ் பாயிண்டாக இருக்கும். இதை இத்துடன் விட்டுவிட்டால்கூட பரவாயில்லை.. ஒரு சாக்காக வைத்து பிரச்சாரமும் மேற்கொண்டால் சாயம் மேலும் வெளுத்து கொண்டுதான் போகும். ஒருவேளை ரெய்டு நடத்தியது தேர்தல் பார்வையாளர்களாகவே இருந்தாலும், இதற்கு துரைமுருகனை மட்டுமே பலிகடாவாக்குவது கொஞ்சம் கூட நியாயமில்லை.
சீமான் பேச்சு
கத்தரிக்காய் வாங்க போறவன், மளிகை கடையில சாமான் வாங்க போறவனை மடக்கி பணத்தை பறிக்கிறது தேர்தல் பறக்கும் படை என்று சீமான் ஆவேசமாக சொல்லி வருவது நூற்றுக்கு நூறு உண்மை என்பது இப்போதுதான் புரிகிறது! அதனால் இப்போதைக்கு தமிழகத்துக்கு உடனடி தேவை, மூட்டை மூட்டையாக பணத்தை விநியோகம் செய்பவர்களை மடக்கி பிடிக்க வேண்டும் என்பதும் அரசியல் சார்பற்ற பாரபட்சமற்ற ரெய்டு முறையும்தான்!