பைப் உடைந்து கசிந்த எண்ணெய்.. இதுவரை 50 பீப்பாய் அகற்றம்.. எண்ணெயில் மிதக்கும் காசிமேடு
சென்னை: சென்னை காசிமேடு பகுதியில் சமையல் எண்ணெய் கொண்டு செல்லும் பைப் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.
கசிந்த எண்ணெய் மழைநீர் வடிகால்களில் கலந்துள்ளதால், எண்ணெய்யை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சென்னை துறைமுகத்திலிருந்து சமையல் எண்ணெய் அருகில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு பைப் மூலம் கொண்டு செல்லப்படும். இவ்வாறு இருக்கையில் நேற்று திடீரென பைப் உடைந்து எண்ணெய் கசிந்துள்ளது.
ஓபிஎஸ் கையில் 3+1 ஆப்ஷன்கள்.. டெல்லி கைவிட்டாலும்.. இருக்கு மெகா அஸ்திரம்.. ரிப்போர்ட் லீக் ஆகுமாம்!
எண்ணெய் கசிவு
வடசென்னையில் கேடிவி எனும் சமையல் எண்ணெய் ஆலை அமைந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் வரும் எண்ணெய், பைப் வழியாக இந்த ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வழக்கம்போல எண்ணெய் இந்த பைப் வழியாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், கடந்த திங்கள் கிழமை எதிர்பாராத விதமாக திடீரென எண்ணெய் கசிய தொடங்கியது. கசிந்த எண்ணெய்யில் அருகில் உள்ள மழைநீர் வடிகால்களில் கலக்கத் தொடங்கிவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர்.
குழாய் உடைப்பு
சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (TNPCB) தலைவர் ஜெயந்தி, தற்போது வரை எவ்வளவு எண்ணெய் கசிந்துள்ளது என்பது குறித்து தெரியவில்லை. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையிலான எங்கள் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளது. இதனையடுத்து நிறுவனதிற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அதில், கசிந்த எண்ணெய்யை அகற்ற வேண்டும் என்றும், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படும் என கூறியுள்ளார்.
சமையல் எண்ணெய்
இவ்வாறு எண்ணெய் கொண்டு செல்லப்படும்போது, ஏற்பட்ட அழுத்தம்தான் பைப் உடைவதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. கசிவு ஏற்பட்டதையடுத்து எண்ணெய் நிறுவனம் சார்பில் குழு அமைக்கப்பட்டு எண்ணெய் அகற்றப்பட்டு வருகிறது. தற்போது வரை 50 பீப்பாய்களில் தண்ணீர் கலந்த எண்ணெய் அகற்றப்பட்டுள்ளது. இது மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒரு டன்னுக்கும் குறைவாகத்தான் எண்ணெய் கசிந்திருக்கிறது, இது தண்ணீருடன் கலந்துள்ளதால் அதிகமாக இருப்பதாக தெரிகிறது என நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
மேலும், இது சமையல் எண்ணெய் என்பதால் கடல்வாழ் உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் எந்த தீங்கும் ஏற்படுத்தாது என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஆனால் இது குறித்து தென்னிந்திய மீனவர் நலச் சங்கம் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் குழாய்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் அதன் விளைவு மோசமாக இருக்கும் என்று சங்கத்தின் தலைவர் பாரதி கூறியுள்ளார்.