சென்னையில் பைக் டாக்சி சேவை துவங்கிய ஓலா.. வண்டிகளை பறிமுதல் செய்த போக்குவரத்து துறை.. மக்களே உஷார்
சென்னை: முன்னணி கால் டாக்சி நிறுவனமான ஓலா, தமிழகத்தில் சட்ட விரோதமாக இருசக்கர வாகனங்கள் மூலம் போக்குவரத்து சேவையை துவங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓலா, போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட 18 இருசக்கர வாகனங்கள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில், ஓலா கால் டாக்ஸி நிறுவனம் கணிசமாக போக்குவரத்து சேவையை, மக்களுக்கு அளித்து வருகிறது.
பைக் டாக்சி
இந்த நிலையில் கார், ஆட்டோ தவிர இருசக்கர வாகன சேவைகளையும், வழங்குவதாக தனது செல்போன் ஆப்பில் அந்த நிறுவனம் சமீபத்தில், இணைத்துள்ளது. கடந்த சில நாட்களாக, இருசக்கர வாகனத்தின் மூலமாக பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து சென்று வந்துள்ளது. ஆட்டோவை விட டூவீலரில் கட்டணம் குறைவு என்பதால் வாடிக்கையாளர்கள் கணிசமாக ஆதரவு தர ஆரம்பித்தனர்.
பைக்குகள் பறிமுதல்
இந்த நிலையில் சென்னை கேகே நகர் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், ஓலா நிறுவனத்தின் 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் பைக்குகள் மட்டுமின்றி ஸ்கூட்டர்களும் அடங்கும். இதையறிந்ததும், ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஓலா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஓலா நிறுவன கால் டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர்.
டிரைவர்கள் போராட்டம்
ஏற்கனவே செடான் வகை கார்களை மைக்ரோ எனக் குறிப்பிடுமாறு ஓலா தங்களை வற்புறுத்துவதாக குற்றஞ்சாட்டும் அவர்கள், இனிமேல் பைக்கிற்கு ஈடாகத்தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் தங்களிடம் கூறுவார்கள். பைக் சேவை இதற்கு அடிகோலும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், குற்றம் சாட்டினர். மேலும், அலுவலகத்துக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
சேவை நிறுத்தம்
எதிர்ப்பு அதிகரித்ததால் இருசக்கர வாகனங்கள் மூலமான சேவைக்கு ஓலா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இருசக்கர வாகனங்களை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த கூடாது என்று போக்குவரத்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை மீறி ஓலா நிறுவனம் செயல்பட்டுள்ளது.
மக்களே உஷார்
சட்டப்படி அனுமதி இல்லை என்பதால், பைக் டாக்சிகளில் பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டு, ஏதாவது நேர்ந்தால், பயணம் செய்தவர்களால், இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளை பெற முடியாத சட்டச் சிக்கல் எழும் என்பதை மக்கள் கவனித்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே பெங்களூரிலும் இதுபோல இருசக்கர வாகனங்கள் மூலமாக பயணிகளை அழைத்துச் செல்லும் சேவையைத் தொடங்கிய நிலையில், போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை தொடர்ந்து அங்கு இந்த சேவையை ஓலா நிறுத்தியது நினைவிருக்கலாம்.