முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்
Recommended Video
சென்னை: அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசு பள்ளிகளை முன்னாள் மாணவர்கள் தத்தெடுக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் மத்திய அரசும், மாநில அரசும் நிதிகளை ஒதுக்கி வருகின்றன.
எனினும் அதிக அளவு பள்ளிகள் மற்றும் அதிகப்படியான மாணவர்களின் எண்ணிக்கை காரணமாக பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது என்பது சவாலான காரியமாகவே உள்ளது.
தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை!!
அரசு அழைப்பு
இந்நிலையில் அரசு பள்ளிகளை அங்கு படித்த முன்னாள் மாணவர்கள் தத்தெடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த முன்வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரன் முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பள்ளியை மேம்படுத்த
"அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றலை தடுத்து அவர்களுக்கு சிறந்த கல்வி வழங்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக் கல்விக்கென ரூ.28 ஆயிரத்து 757 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. இருப்பினும் அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தனியார் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பும் தேவையாக உள்ளது.
முன்வாருங்கள் மக்களே
அதன்படி பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளான சுற்றுச் சுவர், வர்ணம் பூசுதல், இணைய தள வசதிகள், கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்த முன்வர வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது..
அரசு அறிவிப்பு
இதன்படி கடந்த ஆண்டில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் CSR நிதியை பயன்படுத்தி 519 அரசுப் பள்ளிகளில் ரூ.58 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்து உள்ளன. அதே அடிப்படையில் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க விரும்புவோர் முன்வரலாம். அப்படி வருவோருக்கு அனுமதி வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இங்கே தொடர்பு கொள்ளலாம்
அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து நமது வாசகர்கள் பலரும் கூட இதுதொடர்பாக முன்னெடுப்புகளைச் செய்ய முன்வந்துள்ளனர். அவர்களின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களின் பட்டியலை இணைத்துள்ளோம். இதைத் தொடர்பு கொண்டு அரசின் முயற்சியில் தங்களையும் இணைத்துக் கொண்டு வாசகர்கள் உதவாலம். ஊர் கூடி தேர் இழுப்போம்.. நமது மாணவச் செல்வங்களின் உயர்வுக்காக.