ஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்
சென்னை: ஆம்னி பேருந்துகளுக்கு இதுவரை சாலை வரியை தவிர எந்த வரியும் இல்லை என்ற நிலையில், புதிதாக தமிழக அரசு வரிவிதிக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பெரிய அளவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சொகுசாக செல்ல மக்கள் விமானத்தை நாடுகிறார்களோ இல்லையோ, நிச்சயம் வசதியானர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் முதலில் நினைப்பது ஆம்னி பேருந்துகளைத்தான்.
ஏனெனில் ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து கடைக்கோடிநகரான கன்னியாகுமரிக்கும் 12 மணிநேரத்தில் சென்றுவிடுகிறார்கள். மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களை எட்டுமணி நேரததில் அடைந்துவிடுகிறார்கள்.
படுக்கை வசதி பஸ்க்கு வரி
குளுகுளு வசதி மற்றும் படுக்கை வசதி இருப்பதால் அலுப்பு தெரியாமல் தூங்கி எழுந்துகாலையில் ஊருக்கு வந்துவிடுவார்கள். இதேபோல் ஊரில் இருந்து சென்னைக்கும் மக்கள் சென்றுவிடுவார்கள். இப்படி சொகுசான பயணத்தை அளிக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இனி உயரப்போகிறது. அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல.. அதிகமாகவே உயர வாய்ப்பு உள்ளது.
இதுவரை வரியில்லை
ஏனெனில் ஆம்னி பேருந்துகளுக்கு இதுவரை சாலை வரியை தவிர எந்த வரியும் இல்லை. இப்போது படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்கும் புதிய போக்குவரத்து மசோதாவை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.
மூன்று மாதத்திற்கு ரூ.3,000 வரி
இந்த மசோதாவின்படி ஆம்னி பேருந்துகளில் ஒரு படுக்கை வசதிக்கு மூன்று மாதத்திற்கு ரூ.4,000 வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளில் ஒரு இருக்கை வசதிக்கு மூன்று மாதத்திற்கு ரூ.3,000 வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து உரிமையாளர்கள் ஷாக்
இதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மிகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அரசின் இந்த அறிவிப்பு ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.அரசு பேருந்துகளின் கட்டணமும், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தற்போது சிறிய அளவிலேயே வேறுபாடு என்று இருக்கும் நிலையில் இனி வரி விதிக்கும் அரசின் முடிவால் பெரிய அளவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.